Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை

வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை

வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை

வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு 8வது முறையாகவும் நிறைவேறவில்லை

ADDED : ஜூன் 08, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
மும்பை:வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றை வாங்கியவர்கள், வாங்க இருப்பவர்கள் இம்முறையாவது ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைக்குமா என எதிர்பார்த்த நிலையில், 8வது முறையாகவும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தில், எந்த மாற்றமும் இன்றி 6.50 சதவீதமாகவே தொடரும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் கடந்த 5ம் தேதி துவங்கி, மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம், நேற்றுடன் நிறைவடைந்தது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கினார்.

அவர் தெரிவித்தவற்றில் முக்கியமானவை:

 ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.50 சதவீதமாகவே தொடரும்

 நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு, முன்பு தெரிவிக்கப்பட்ட 7 சதவீதத்திலிருந்து 7.20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது

 நடப்பு நிதியாண்டில், பணவீக்கம் 4.50 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், உணவு பிரிவு பணவீக்கத்தால் ஒட்டுமொத்த பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது

 உணவுப் பிரிவில் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் பணவீக்கம், மற்ற பிரிவுகளில் குறைந்துள்ள பணவீக்கத்தை உணரவிடாமல் செய்கிறது

 பருவமழை, வழக்கத்தை விட கூடுதலாக பதிவாகும் என்ற கணிப்பு மெய்யாகும் பட்சத்தில், அது உணவு பணவீக்கத்தை குறைக்க உதவும்

 பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டுவருவதையே, ரிசர்வ் வங்கி இலக்காக கொண்டு இயங்கி வருகிறது

 பணவீக்கம் நான்கு சதவீதத்துக்கு கீழ் வந்து, அதே நிலையில் நீடிக்கும்பட்சத்தில், அதன் பின் வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்

 உள்நாட்டில் தங்கத்தை சேமித்து வைக்க போதுமான திறன் உள்ளதாலேயே, சமீபத்தில் பிரிட்டனிலிருந்து 100 டன் தங்கம் திருப்பிக் கொண்டு வரப்பட்டன. இதற்கு வேறு எந்த காரணங்களும் இல்லை.

இவ்வாறு தெரிவித்தார்.

யு.பி.ஐ., லைட்: புதிய வசதி

ரிசர்வ் வங்கி, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் 'யு.பி.ஐ., லைட்' எனும் பணப்பட்டுவாடா சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக, இணைய வசதி இல்லாமலேயே, நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் மேற்கொள்ளலாம். ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக, 500 ரூபாய் செலவழிக்கலாம். இந்நிலையில், வாடிக்கையாளர்களின் இருப்பு அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு கீழே செல்லும் பட்சத்தில், தானாகவே மீண்டும் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை நிரப்பிக் கொள்ளும் வசதியை, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. யு.பி.ஐ., லைட் சேவையின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் பாஸ்டேக், என்.சி.எம்.சி., கார்டு உள்ளிட்டவற்றுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கையிருப்பு புதிய உச்சம்

கடந்த மே 31ம் தேதி நிலவரப்படி, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு, 54.07 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடுகள், தொடர்ந்து மேம்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நடப்பு நிதியாண்டில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, சமாளிக்கக் கூடிய நிலையிலேயே இருக்கும் என, நம்பிக்கை வெளிப்படுத்தினார்.



வட்டி விகிதத்தை குறைக்க வலுக்கும் குரல்

அண்மைக் காலமாக வட்டி விகிதம் குறித்து, பணக் கொள்கை குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவுகளை எடுத்து வந்தனர். ஆனால், நேற்று நிறைவடைந்த பணக் கொள்கை குழு கூட்டத்தில், முந்தைய கூட்டங்களைப் போல் இல்லாமல், உறுப்பினர்களிடையே ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக கருத்து வேறுபாடு அதிகரித்தது. ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுவில், மொத்தம் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்று உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள்; மூன்று உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்கள். இதுவரை, அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான ஜெயந்த் வர்மா மட்டுமே, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில், மற்றொரு உறுப்பினரான அஷிமா கோயலும் இதை வலியுறுத்த, வட்டி விகிதத்தை குறைப்பதற்கான குரல் வலுத்து வருகிறது.



ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்ப்பு

வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாத நிலையில், ரியல் எஸ்டேட் துறையினர் வட்டி விகிதத்தை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து, வீடுகளின் தேவையை அதிகரிக்க, அடுத்த பணக் கொள்கை கூட்டத்திலாவது, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, வலியுறுத்திஉள்ளனர்.



'பல்க் டிபாசிட்' வரம்பு உயர்வு

வங்கிகளில் ஒரே முறையில் மொத்தமாக மேற்கொள்ளப்படும் 'பல்க் டிபாசிட்'களின் உச்ச வரம்பை, 2 கோடி ரூபாயிலிருந்து, மூன்று கோடி ரூபாயாக, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் 'டேர்ம் டிபாசிட்'களைக் காட்டிலும், பல்க் டிபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் சற்றே அதிகமாகும். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, வங்கிகளின் பணப் புழக்கத்தை மேம்படுத்தவும்; வங்கித்துறையில் பெரிய முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், 'பெமா' சட்டத்தின் கீழ், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான விதிகளில் மாற்றம் மேற்கொள்ள உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாதிரி வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்பட்டு, கருத்துக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us