ADDED : மே 04, 2026 10:52 PM
பெங்களூரு: மின் கட்டணம் மற்றும் காஸ் விலை உயர்வை தொடர்ந்து, காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. வடமாவட்டங்களில் வெயில், 45 டிகிரி செல்சியஷை தாண்டி வாட்டுகிறது. இதன் விளைவாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. வெப்பத்தை தாங்காமல் செடிகளிலேயே காய்கள் உதிர்கின்றன. மார்க்கெட்களுக்கு வரத்து குறைந்துள்ளதால், விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
பீன்ஸ் விலை கிலோ, 200 ரூபாயை எட்டியுள்ளது. கத்திரிக்காய், 80 ரூபாய், வெண்டைக்காய், 75 ரூபாய், தக்காளி, வெள்ளரிக்காய், பீட்ரூட் கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மற்ற காய்கறிகளின் விலையும், வாங்கும்படி இல்லை. காய்கறிகள் மட்டுமின்றி, கீரைகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கீரை விலை, 40 ரூபாயாக உள்ளது.
சமீபத்தில் ஆங்காங்கே மழை பெய்ததால், காய்கறிகள் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து உயர்கிறது. ஏற்கனவே மின் கட்டணம், காஸ் விலை உயர்ந்துள்ளது.
இப்போது காய்கறிகளின் விலையும் அதிகரிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போதைக்கு காய்கறி விலை குறைய வாய்ப்பில்லை என, வியாபாரிகள் கூறுகின்றனர்.





