Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பீரங்கி குண்டு வெடிப்பு ஒத்திகை பீதியடைந்த 'ஸ்ரீகண்டா' யானை

பீரங்கி குண்டு வெடிப்பு ஒத்திகை பீதியடைந்த 'ஸ்ரீகண்டா' யானை

பீரங்கி குண்டு வெடிப்பு ஒத்திகை பீதியடைந்த 'ஸ்ரீகண்டா' யானை

பீரங்கி குண்டு வெடிப்பு ஒத்திகை பீதியடைந்த 'ஸ்ரீகண்டா' யானை

ADDED : செப் 16, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, நேற்று தசரா யானைகளுக்கு பீரங்கி வெடிகுண்டு பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது. முதல் சுற்று குண்டு வெடித்தபோது, 'ஸ்ரீகண்டா' யானை லேசாக பீதியடைந்தது.

மைசூரு தசராவை முன்னிட்டு, நகருக்கு 14 யானைகள் வந்துள்ளன. அவற்றுக்கு தினமும் இரண்டு வேளை நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் ஜம்பு சவாரியின்போது, பீரங்கி குண்டுகள் வெடிக்கப்படும். இந்நேரத்தில் யானைகள் மிரளாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படும். இதற்கான ஒத்திகை, தசரா கண்காட்சி மைதானத்தில் நேற்று நடந்தது.

பாரம்பரிய முறைப்படி யானைகளுக்கு, வனத்துறையினர் பூஜை செய்து வரவேற்றனர். ஏழு பீரங்கிகள் மூலம் வெடிகுண்டு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறியதாவது:

போலீஸ் துறை, வனத்துறை இணைந்து முதல் கட்டமாக யானைகளுக்கு பீரங்கி ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் யானைகள் மட்டுமின்றி, குதிரைகளும் பங்கேற்றன.

ஜம்பு சவாரியன்று நடக்கும் பீரங்கி குண்டு மரியாதையின்போது யானைகள் மிரளக்கூடாது என்பதற்காக இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. முதல்கட்ட ஒத்திகை முடிந்துவிட்டது. இரண்டாவது, மூன்றாவது கட்ட ஒத்திகை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வனத்துறை அதிகாரி பிரபு கவுடா கூறியதாவது:

யானைகளுக்கு நடைபயிற்சி, சுமை துாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று பட்டாசுகள் வெடித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முதன் முறையாக தசராவுக்கு வந்துள்ள ரூபா, ஸ்ரீகண்டா, ஹேமாவதி ஆகிய யானைகளும் பங்கேற்றன.

இதில், முதல் முறை குண்டுகள் வெடித்தபோது, ஸ்ரீகண்டா யானை மட்டும் பயத்தில் திரும்பிக் கொண்டது. அதன்பின், மூன்று முறை குண்டுகள் வெடிக்கப்பட்ட போது, அது திரும்பவில்லை. இன்றைய ஒத்திகை சிறப்பாக முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us