Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மஹாராஷ்டிராவில் கொள்ளையர் வீசிச்சென்ற ரூ.41 லட்சம் பணம், நகைகள் கண்டுபிடிப்பு

மஹாராஷ்டிராவில் கொள்ளையர் வீசிச்சென்ற ரூ.41 லட்சம் பணம், நகைகள் கண்டுபிடிப்பு

மஹாராஷ்டிராவில் கொள்ளையர் வீசிச்சென்ற ரூ.41 லட்சம் பணம், நகைகள் கண்டுபிடிப்பு

மஹாராஷ்டிராவில் கொள்ளையர் வீசிச்சென்ற ரூ.41 லட்சம் பணம், நகைகள் கண்டுபிடிப்பு

ADDED : செப் 20, 2025 04:58 AM


Google News
விஜயபுரா: சடசனாவில் எஸ்.பி.ஐ., வங்கியில் நடந்த கொள்ளை அடிக்கப்பட்ட 41 லட்சம் ரூபாய், 6.5 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விஜயபுரா மாவட்டம், சடசனாவின் பண்டரபுரா பிரதான சாலையில், எஸ்.பி.ஐ., வங்கி உள்ளது. கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணியளவில், வங்கிக்குள் புகுந்த மர்ம கும்பல், துப்பாக்கிமுனையில் லாக்கரில் இருந்த பணம், தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் மஹாராஷ்டிரா சென்றது தெரிய வந்தது. விஜயபுரா போலீசார், மஹாராஷ்டிரா போலீசாரின் உதவியுடன், கொள்ளையர்களை பிடிக்க முயற்சிக்கின்றனர். இரண்டு மாநிலங்களின் போலீசாரும், விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் ஹுலஜந்தி கிராமத்தின் பாழடைந்த வீட்டின் மீது சந்தேகத்துக்கு இடமான பை இருப்பதை கவனித்த அப்பகுதியினர், நேற்று முன் தினம், மங்களகேடா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற போலீசார், பையை கைப்பற்றினர். அதில் 6.54 கிலோ தங்கநகைகளும், 41.4 லட்சம் ரூபாய் ரொக்கமும் இருப்பது தெரிந்தது.

இது கர்நாடகாவின் எஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகளாக இருக்கலாம் என கருதி, விஜயபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஹுலஜந்தி கிராமத்தினரிடம் போலீசார் விசாரித்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வந்த கார், 16ம் தேதி, பைக் மீது மோதியது. கேள்வி எழுப்பியபோது, காரில் இருந்தவர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி விட்டு தப்பியது தெரிய வந்தது. அவர்கள் விட்டுச் சென்ற, சிறிய பையில் சிறிது தங்க நகைகளும், 1.30 லட்சம் ரொக்கமும் இருந்ததாக கிராமத்தினர் கூறினர்.

காரில் இருந்த நபர்களே, பாழடைந்த வீட்டின் கூரையில் நகைகள், பணம் இருந்த பையை வீசிச் சென்றிருக்கலாம் என, கிராமத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். காரில் சென்றவர்கள், வங்கி கொள்ளையர்களே என்பது உறுதியானது. அதன்பின் சுற்றுப்பகுதியில் தேடியபோது, கொள்ளைக்கு பயன்படுத்திய காரும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளையர்கள் மஹாராஷ்டிராவில் தலைமறைவாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இரு மாநில போலீசாரும், அவர்களை தேடி வருகின்றனர். வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருந்த வாடிக்கையாளர்கள், வருத்தத்தில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us