Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காது கேளாதோருக்கான சிகிச்சை மையம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு

காது கேளாதோருக்கான சிகிச்சை மையம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு

காது கேளாதோருக்கான சிகிச்சை மையம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு

காது கேளாதோருக்கான சிகிச்சை மையம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு

ADDED : செப் 02, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
மைசூரு : ''காது கேளாத, வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தை நிர்வகித்து வரும் மகளிரின் சேவை பாராட்டுக்குரியது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

மைசூரு மானச கங்கோத்ரி கல்வி வளாகம் அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தின் வைர விழாவை நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சியில் தொடர்ந்து சேவை செய்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையம், நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. 1965ல் துவக்கப்பட்ட இம்மையம், 60 ஆண்டுகளாக இத்துறையில் சாதனை படைத்து வருகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தை பல ஆண்டுகளாக பெண்களே நிர்வகித்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். இம்மையத்தின் இன்றைய இயக்குநர் புஷ்பலதாவின் சேவை பாராட்டத்தக்கது.

இம்மையம் துவங்க காரணமான அன்றைய மன்னர் ஜெய சாமராஜேந்திர உடையார், நிலம் வழங்கியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று அவரது குடும்பத்தின் வாரிசு யதுவீர் உடையார், விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.

புள்ளி விபரங்கள்படி, 2023ல் இந்தியாவில் 6 கோடி பேர் வாய் பேச முடியாமல், காது கேட்காத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தொழில்நுட்ப உலகில் இவர்கள் நவீன கருவிகளை பயன்படுத்தி, தங்களின் பிரச்னையை தீர்க்கலாம்.

காது கேட்கும் கருவிகளை தயாரிப்பதில் இம்மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக செய்கை மொழி தினத்தை ஆண்டுதோறும் செப்., 23ம் தேதி கடைபிடித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us