Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.பி., மனைவியிடம் சைபர் மோசடி ரூ.14 லட்சம் பணத்தை மீட்ட போலீஸ்

எம்.பி., மனைவியிடம் சைபர் மோசடி ரூ.14 லட்சம் பணத்தை மீட்ட போலீஸ்

எம்.பி., மனைவியிடம் சைபர் மோசடி ரூ.14 லட்சம் பணத்தை மீட்ட போலீஸ்

எம்.பி., மனைவியிடம் சைபர் மோசடி ரூ.14 லட்சம் பணத்தை மீட்ட போலீஸ்

ADDED : செப் 23, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: 'டிஜிட்டல்' கைது செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி, பா.ஜ., - எம்.பி., சுதாகரின் மனைவியிடமிருந்து 14 லட்சம் ரூபாய் பணத்தை சைபர் மோசடி கும்பல் அபகரித்தது. அந்த பணத்தை கிரைம் போலீசார் மீட்டனர்.

சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர். இவரது மனைவி பிரீத்தி. பிரீத்தியின் மொபைல் எண்ணுக்கு கடந்த மாதம் 26ம் தேதி அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அந்நபர், தன்னை மும்பை சைபர் கிரைம் போலீஸ் பிரிவை சேர்ந்த அதிகாரி சபத் கான் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

'உங்களது கிரெடிட் கார்டு மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. அதனால், நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்' என, அவர் தெரிவித்தார். இதை கேட்டு பிரீத்தி அதிர்ச்சி அடைந்தார்.

பிரீத்தியை கட்டாயப்படுத்தி 'வாட்ஸாப்' வீடியோ கால் செய்ய வைத்தார். அப்போது, பிரீத்தியின் வங்கி விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளார். 'நான் கூறும் வங்கிக் கணக்கிற்கு 14 லட்சம் ரூபாய் உடனடியாக அனுப்ப வேண்டும். அந்த பணத்தை 'வெரிபிகேஷன்' முடிந்த 45 நிமிடங்களுக்குள் திருப்பி அனுப்பிவிடுவோம்' என கூறியுள்ளார்.

அதன்படி, 14 லட்சம் ரூபாயை பிரீத்தி அனுப்பினார். அதன் பின், இணைப்பை அந்த நபர் துண்டித்துவிட்டார். அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அவர் கூறியபடி, பணமும் திரும்ப வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரீத்தி, உடனடியாக '1930' என்ற எண்ணை தொடர்பு கொண்டு, சைபர் போலீசில் புகார் அளித்தார்.

துரிதமாக செயல்பட்ட பெங்களூரு மேற்கு பிரிவு சைபர் கிரைம் போலீசார், சைபர் திருடர்களின் வங்கிக் கணக்கை முடக்கினர். பிறகு, அந்த வங்கிக் கணக்கிலிருந்து 14 லட்சம் ரூபாயை மீட்டனர்.

இதுகுறித்து நேற்று பெங்களூரு மேற்கு பிரிவு போலீசார் கூறியதாவது:

சைபர் மோசடி நடந்து முடிந்த முதல் ஒரு மணி நேரத்தை 'கோல்டன் ஹவர்' என அழைக்கிறோம். அதேபோல், சைபர் மோசடி நடந்த ஒரு மணி நேரத்திற்குள் பிரீத்தி புகார் அளித்தார். இது பணத்தை போலீசார் மீட்பதை எளிதாக்கியது.

சைபர் திருடர்களின் வங்கிக் கணக்கை போலீசார் முடக்கினர். பிறகு, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 3ம் தேதி பணம் மீட்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் பணம் மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் திருடரை தேடி வருகிறோம்.

சைபர் மோசடி நடந்தவுடன் புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிது. அதுபோல, டிஜிட்டல் கைது போன்ற விஷயங்களை நம்ப வேண்டாம். போலீசார் 'வீடியோ கால்' செய்து யாரையும் மிரட்ட மாட்டார்கள்.

எனவே, இது போன்ற போலி அழைப்புகளை நம்பி பணத்தை ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us