ADDED : ஜூன் 12, 2025 07:56 AM

தாவணகெரே : ''அமைச்சர்கள் துறை பணிகளை விட, தங்கள் சொந்த தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்,'' என, சென்னகிரி காங்கிரஸ் எம்எல்.ஏ., சிவகங்கா பசவராஜ் குற்றம்சாட்டினார்.
தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில அமைச்சர்கள், மக்களின் எதிர்பார்ப்பின்படி பணியாற்றுவது இல்லை. துறை பணிகளை கவனிப்பதை விட, தங்களின் சொந்த தொழில் வளர்ச்சியில் அதிகமான ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய அமைச்சர்களை பதவியில் வைத்திருப்பது சரியா.
சிறப்பாக பணியாற்றாத அமைச்சர்களை, தங்களின் சொந்த தொழிலை கவனிக்கும்படி கூறி, அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும். புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். புதியவர்கள் நன்றாக பணியாற்றுவர்.
நானும் அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறேன். பதவி வேண்டாம் என, கூற நான் சன்னியாசி அல்ல. பதவி கொடுத்தால் சிறப்பாக பணியாற்றுவேன். என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவேன் என, எழுதி கையெழுத்திட்டு தருகிறேன்.
ஒரு மாவட்டத்துக்கு, இரண்டு அமைச்சர் பதவி வழங்க கூடாது என்ற விதிமுறை ஏதும் இல்லை. காங்., மேலிடம் தற்போதைய அமைச்சர்களின் செயல் திறன் அறிக்கையை கவனித்து, அவர்களை நீக்க வேண்டும். எட்டு முதல் பத்து பேரை நீக்கிவிட்டு, புதியவர்களை சேர்க்கட்டும். ஐந்தாறு முறை எம்.எல்.ஏ., ஆனவர்களுக்கு, அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
