Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ கூர்க்கின் பசுமையை பறைசாற்றும் மண்டல்பட்டி 'வியூ பாயின்ட்'

கூர்க்கின் பசுமையை பறைசாற்றும் மண்டல்பட்டி 'வியூ பாயின்ட்'

கூர்க்கின் பசுமையை பறைசாற்றும் மண்டல்பட்டி 'வியூ பாயின்ட்'

கூர்க்கின் பசுமையை பறைசாற்றும் மண்டல்பட்டி 'வியூ பாயின்ட்'

ADDED : செப் 10, 2025 10:06 PM


Google News
Latest Tamil News
கூர்க் என்றாலே, கொடவா சமூகத்தினர் வாழும் பகுதியாகும். இவர்கள் வாழும் பகுதியை சுற்றிலும், இயற்கையை வணங்கி, பசுமையை பறைசாற்றுபவர்கள்.

நாட்டிலேயே உரிமம் இல்லாமல், துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி பெற்ற ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் கொடவாக்கள் தான். இவர்களின் ஆயுதம் கத்தியும், துப்பாக்கியுமாகும்.

இவர்கள் வசிக்கும் கூர்க் எனும் குடகு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, 'மண்டல்பட்டி வியூ பாயின்ட்'. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். கடல் மட்டத்தில் இருந்து, 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்களை கவரும். இந்த வியூ பாயின்டில் நின்றபடி, குடகின் பரந்து விரிந்த மலைகளை காணலாம். குடகிற்கு செல்வோர் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.

மடிகேரி நகரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ள மண்டல்பட்டி வியூ பாயின்ட், புஷ்பகிரி வன விலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியில் அமைந்து உள்ளது.

இந்த மலைக்கு வாகனங்கள், ஜீப் சவாரி அல்லது மலையேற்றம் மூலம் செல்லலாம். சுற்றிலும் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள், காபி தோட்டங்களை காணலாம். மூடுபனி, பசுமையை விரும்பும் புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகும்.

கோடை காலங்களில் இங்கு வந்தால், மேற்கு தொடர்ச்சி மலைகளின் அணிவகுப்பையும், மடிகேரி நகரையும் காணலாம். அடர்ந்த காடுகள், வளமான பல்லுயிர் பெருக்கத்தால் சூழப்பட்டு உள்ளது. இப்பகுதியின் இயற்கை அழகு, பார்வையாளர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது.

மண்டல்பட்டியை அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கண்டு ரசிக்கலாம். அப்போது தான் வானிலை இனிமையானதாகவும், மலையேற்றத்துக்கு உகந்ததாகவும் இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் மழை காலம் என்பதால், பாறைகள் வழுக்கும்; ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மலையேற்றம் செய்வோர், மலையேற்ற காலணிகளை அணிவது நல்லது. இயற்கை அன்னையை மதித்து, குப்பை கொட்டுவதை தவிர்க்கவும். மலையேற்றம், ஜீப்பில் செல்வோர் முறைப்படி வனத்துறையினரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us