ADDED : ஏப் 15, 2025 06:56 AM

ராய்ச்சூர்: பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது, கத்தியுடன் பங்கேற்ற வாலிபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசுகூரில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீராமசேனை அமைப்பு சார்பில் ஸ்ரீராமநவமி நடத்தப்பட்டது. பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பங்கேற்றார். பல்வேறு ஹிந்து அமைப்பினரும் வருகை தந்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
மேடையில் எத்னால் பேசிக் கொண்டிருந்தபோது, தொப்பி அணிந்த நபர் ஏறினார். இதை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர். அவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், பரிசோதித்ததில் அவரது பேன்டில் கத்தி வைத்திருந்தது தெரிந்தது.
உடனடியாக அவரை லிங்கசுகூர் போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். லிங்கசுகூரை சேர்ந்த சீனிவாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
