Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சோமசேகர், சிவராம் ஹெப்பார் பா.ஜ.,வில் இருந்து நீக்க முடிவு?

சோமசேகர், சிவராம் ஹெப்பார் பா.ஜ.,வில் இருந்து நீக்க முடிவு?

சோமசேகர், சிவராம் ஹெப்பார் பா.ஜ.,வில் இருந்து நீக்க முடிவு?

சோமசேகர், சிவராம் ஹெப்பார் பா.ஜ.,வில் இருந்து நீக்க முடிவு?

ADDED : மார் 16, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கட்சிக்கு எதிராக செயல்படும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

பெங்களூரின், யஷ்வந்த்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,சோமசேகர், எல்லாபுரா எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் இதற்கு முன் காங்கிரசில் இருந்தனர்.

2019ல் கூட்டணி அரசை கவிழ்க்க, காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தனர். இக்கட்சி அரசில் அமைச்சர் பதவியும் கிடைத்தது.

ஆனால், 2023 சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வியடைந்து ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்த பின், சோமசேகர், சிவராம் ஹெப்பாரின் பார்வை காங்கிரஸ் மீது பதிந்துள்ளது.

தங்களுக்கு சீட் கொடுத்து, வெற்றி பெற வைத்ததுடன் அமைச்சர் பதவி கொடுத்த பா.ஜ.,வுக்கு துரோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டனர்.

பகிரங்கம்


ராஜ்யசபா தேர்தலிலும் கூட, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்ததாக சோமசேகர் பகிரங்கமாகவே கூறினார். அவ்வப்போது முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை புகழ்கிறார்; பா.ஜ., தலைவர்களை விமர்சிக்கிறார்.

இவர்களை கட்சியில் இருந்து நீக்கும்படி தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர். இதை தீவிரமாக கருதிய மேலிடம், இரண்டு எம்.எல்.ஏ.,க்களின் செயல் குறித்து அறிக்கை அளிக்கும்படி, ஒழுங்கு பாதுகாப்பு கமிட்டிக்கு உத்தரவிட்டது.

இதன்படி ஆய்வு செய்த ஒழுங்கு கமிட்டி, சோமசேகர், சிவராம் ஹெப்பார் கட்சிக்கு எதிராக செயல்படுகின்றனர். இவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும்படி, சிபாரிசு செய்துள்ளது.

இது குறித்து, பா.ஜ., ஒழுங்கு பாதுகாப்பு கமிட்டி தலைவர் லிங்கராஜ பாட்டீல் கூறியதாவது:

சட்டசபை தேர்தலுக்கு பின், சோமசேகர், சிவராம் ஹெப்பார் கட்சிக்கு எதிராக செயல்படுகின்றனர். லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தலிலும், கட்சிக்கு எதிராக செயல்பட்டனர்.

சமர்ப்பிப்பு


இவர்களின் தொகுதிகளுக்கு சென்று, அறிக்கை தயாரித்தேன். கட்சி தொண்டர்கள், மண்டல தலைவர், மாவட்ட தலைவரை சந்தித்து தகவல் பெற்றேன்.

இவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதை உறுதி செய்யும் வீடியோ மற்றும் நாளிதழ் குறிப்புகளை அறிக்கையில் இணைத்துள்ளேன். ஏற்கனவே மத்திய ஒழுங்கு கமிட்டி தலைவர் ஓம் பாட்டீலிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்.

கட்சி பணிகளில் ஈடுபடாத சோமசேகர், சிவராம் ஹெப்பார், காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவு வைத்துள்ளனர்.

பா.ஜ., தலைவர்களை விமர்சிக்கின்றனர். சிவகுமார் மாநில காங்கிரஸ் தலைவராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, ஏற்பாடு செய்த விருந்தில் இருவரும் கலந்து கொண்டு உள்ளனர்.

எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் முடிவு செய்துள்ளது. இம்மாதம் இறுதியில், இவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us