Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மருத்துவமனைகளை தரம் உயர்த்த பெங்களூரு மாநகராட்சி திட்டம்

மருத்துவமனைகளை தரம் உயர்த்த பெங்களூரு மாநகராட்சி திட்டம்

மருத்துவமனைகளை தரம் உயர்த்த பெங்களூரு மாநகராட்சி திட்டம்

மருத்துவமனைகளை தரம் உயர்த்த பெங்களூரு மாநகராட்சி திட்டம்

ADDED : ஜூன் 20, 2025 11:09 PM


Google News
பெங்களூரு: 'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் கீழ், 19 மருத்துவமனைகளை தரம் உயர்த்த, பெங்களூரு மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய பொது ஆரோக்கிய விதிமுறை - 2022ன் படி, நகர சமுதாய சுகாதார மையங்களில், அவசர சிகிச்சை, பொது மருத்துவம், சாதாரண அறுவை சிகிச்சை, பல் மருத்துவ சிகிச்சை அளிப்பது கட்டாயம்.

ஆனால் பெங்களூரு மாநகராட்சி சுகாதார மையங்களில், மேற்கண்ட வசதிகள் இல்லை.

நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, முதன் முறையாக, இத்தகைய திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது. இதற்காக, 19 மருத்துவமனைகளை மேம்படுத்த தயாராகிறது.

மருத்துவமனைகள் அதிநவீனமாகின்றன. பிரசவ மருத்துவமனையின் அறைகள் புது வடிவம் பெறவுள்ளன.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வகங்கள் அமைக்கப்படும். இட வசதி இருந்தால், கூடுதல் வார்டுகள் கட்டப்படும்.

அது மட்டுமின்றி, ஐந்து சுகாதார மையங்கள், தலா 50 படுக்கை வசதிகள் திறன் கொண்டதாக மேம்படுத்தப்படும். இங்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகள் செய்யப்படும்.

ஓராண்டுக்கு முன்பே, மாநில அரசிடம் விவரித்து இந்தத் திட்டத்துக்கு மாநகராட்சி அனுமதி கோரியது. இதற்கு நடப்பாண்டு ஜனவரியில், அனுமதி கிடைத்தது.

திட்டத்தை ஒரே கட்டத்தில் முடிப்பது கஷ்டம். எனவே மூன்று கட்டங்களில் செயல்படுத்த மாதகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டங்களை 413 கோடி ரூபாயில் மூன்று கட்டங்களாக செயல்படுத்த, டெண்டர் அழைக்கப்படும்.

திட்டம் முடிவடைந்தால், பொது மக்களுக்கு பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், சாதாரண அறுவை சிகிச்சைகள், பல் சிகிச்சை ஆகிய வசதிகள் கிடைக்கும். 'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் நிதியுதவி பயன்படுத்தப்படும்.

முதற்கட்டத்தில் 19 மருத்துவமனைகளை இடித்து, புதிதாக கட்டப்படும். இரண்டாம் கட்டத்தில் தற்போதுள்ள சுகாதார மையங்களின் கட்டடங்களை நவீனமாக்கி, தரம் உயர்த்தப்படும்.

நவீனமான மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்படும். மூன்றாம் கட்டத்தில் ஆய்வகம், கூடுதல் வார்டுகள், படுக்கைள் திறன் அதிகரிக்கப்படும். அவசர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us