Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சொத்து வரி ஏய்ப்பு செய்வோருக்கு 'நோட்டீஸ்' பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சொத்து வரி ஏய்ப்பு செய்வோருக்கு 'நோட்டீஸ்' பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சொத்து வரி ஏய்ப்பு செய்வோருக்கு 'நோட்டீஸ்' பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சொத்து வரி ஏய்ப்பு செய்வோருக்கு 'நோட்டீஸ்' பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

ADDED : ஜூன் 15, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: சொத்து வரி செலுத்தாமல், 'டிமிக்கி' கொடுக்கும் சொத்துதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி, அதிகாரிகளுக்கு பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு மாநகராட்சியின் புதிய தலைமை கமிஷனராக பொறுப்பேற்ற மஹேஸ்வர் ராவ், மாநகராட்சியில் மாற்றங்களை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறார்.

தினமும் நகரின் பல்வேறு பகுதிகளை, நேரில் சென்று ஆய்வு செய்கிறார். சாலைகள், மழை நீர்க்கால்வாய்களை ஆய்வு செய்கிறார். பிரச்னைகளை சரிசெய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.

சொத்து வரி செலுத்த போதுமான அவகாசம் அளித்தும், லட்சக்கணக்கான சொத்துதாரர்கள் வரி செலுத்தாமல், அலட்சியம் காட்டுகின்றனர். அனைத்து சொத்துகளில் இருந்தும், வரி வசூலானால் 6,009 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, சொத்து வரி வசூலை அதிகமாக்க மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.

கட்டடங்களின் பரப்பளவை, ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, உண்மையான பரப்பளவை தெரிந்து கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறைவான பரப்பளவை அறிவித்து, மோசடி செய்தவர்களுக்கு, அபராதத்துடன் வரி விதிக்க தயாராகிறது. இதனால் மூன்று லட்சம் சொத்துதாரர்கள், நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

ஆண்டுக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பும்படி, மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி வருவாய்ப்பிரிவு சிறப்பு கமிஷனர் முனிஷ் மவுத்கில் கூறியதாவது:

தாமாக முன் வந்து, சொத்து மதிப்பை அறிவிக்கும் சலுகையை, சொத்து உரிமையாளர்கள் தவறாக பயன்படுத்தினர். இவர்களின் சொத்துகள் பரப்பளவை தெரிந்து கொள்ள, டிரோன் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வில் சொத்து பரப்பளவு தவறாக அறிவித்தது தெரிகிறது. இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவோம். வட்டி மற்றும் அபராதத்துடன் வரி வசூலிப்போம்.

பெங்களூரில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் உள்ளன. பலர் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். ஐந்து மாடிகள் கொண்ட கட்டடங்கள் இருந்தும், மூன்று மாடிகள் என, பொய்யான தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களுக்காக ஒன் டைம் செட்டில்மெண்ட் சலுகையும் அளிக்கப்பட்டது.

ஓராண்டு வரை இச்சலுகை இருந்தது. பொன்னான இந்த வாய்ப்பையும் பயன்படுத்தவில்லை. இவர்கள் மீது, மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், ஐந்து சதவீதம் தள்ளுபடி சலுகையுடன் சொத்து வரி செலுத்த, மே இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் லட்சக்கணக்கான சொத்துதாரர்கள், இன்னும் வரி செலுத்தவில்லை. இவர்களின் வசதிக்காக, வரி தள்ளுபடி சலுகையை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கும்படி அரசு உத்தரவிட்டது. இதன்படி சலுகை காலத்தை மாநகராட்சி நீட்டித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us