/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரு விவசாயி இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரு விவசாயி
இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரு விவசாயி
இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரு விவசாயி
இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரு விவசாயி
ADDED : ஜூன் 01, 2025 06:43 AM

தாவணகெரே, ஹரிஹரா தாலுகா மல்லலநாயக்கனஹள்ளியே சேர்ந்தவர் ராகவ், 43. இவர் அதே பகுதியில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில், மரங்கள், செடிகள் நிறைந்த வனப்பகுதிக்குள் ஒரு வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
தன் சிறு வயதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற இயற்கை விவசாயி மசனோபு புக்குவோக்காவை பற்றி ராகவ் படித்துள்ளார்.
முழுநேர விவசாயி
அப்போது, தானும் அவரைப் போல ஆக வேண்டும் என உறுதி கொண்டார். இதன் காரணமாக, இவர் தன் வீட்டில் செடி, கொடிகளை வளர்க்க துவங்கினார். இது நாளடைவில், அவரது பொழுதுபோக்குகளில் ஒன்றாக மாறியது.
செடி, கொடிகளை தாண்டி, காய்கறிகள், பழங்கள் தரும் மரம், செடிகளை நட்டு பராமரிக்க துவங்கினார். முழு நேர விவசாயியாக மாறினார்.
விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை விற்று வாழ்க்கையை வாழ துவங்கினார். இவரின் தோட்டத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளுக்கு அப்பகுதியில் மவுசு அதிகமாகினது. இதற்கு காரணம், அவர் ரசாயனங்களை உபயோகிப்பது இல்லை என்பதே.
இதிலிருந்து வரும் லாபத்தை வைத்து, நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களும், அவருடன் சேர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, இவர் உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், தக்காளி, மருத்துவ தாவரங்கள், பருப்பு வகைகள், அலங்கார பூக்கள் ஆகியவை பயரிட்டு வருகிறார்.
இதில், குடும்பத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கிறார்.
இவரது தோட்டத்தில், 70 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்த பழ மரங்களை வளர்த்து வருகிறார். அவை, ஸ்டார் பழம், கொய்யா, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், அன்னாசி பழம் போன்றவற்றை பயிர் செய்து வருகிறார். இது மட்டுமின்றி கிழங்கு வகைகளையும் பயிர் செய்து உள்ளார்.
இவற்றை, வாரம் ஒரு முறை என அருகில் உள்ள சந்தைக்கு சென்று விற்பனை செய்து வருகிறார். சிலர், இவரது தோட்டத்திற்கு நேரடியாக சென்று பழங்கள், காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, இவரது வீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இவரும் கதர் ஆடைகளையே அணிந்து வருகிறார். அவரது ஊரில் உள்ள விவசாயிகள் அனைவரும் 'ரோல் மாடலாக' பார்க்கின்றனர்.
விவசாயிகள் அனைவரின் ரோல் மாடலாக திகழும் இயற்கை விவசாயி ராகவன் கூறுவதை பார்ப்போமா?
என் தோட்டத்தில் பூக்கள், மருத்துவ தாவரங்கள், பழங்கள், அரிசி, தேங்காய், உள்நாட்டு, வெளிநாட்டு பழ செடிகள் வளர்த்து வருகிறேன். அதுமட்டுமின்றி சில அரிசி வகைகளையும் பயிரிட துவங்கி உள்ளேன். இந்த வகை அரிசிகளை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.
'கடு பசலே' என்ற மூலிகை தாவரத்தை பயிரிட்டு உள்ளேன். இதை சாப்பிடுவதன் மூலம், சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் போன்றவை கரையும்.
பணம் மட்டும் உலகமில்லை
தோட்டத்தில் பயிரிடும் அனைத்தும் முதலில் எங்கள் வீட்டுக்கு எடுத்து வைக்கப்படும். அது தவிர, மீதமுள்ளவையே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும்.
எந்த ஒரு இடைத்தரகருக்கும் விற்பதில்லை. இதை தவிர ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறோம். ஆன்லைன் விற்பனையில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் பலர் வாங்குகின்றனர்.
வருமானம் என்பது நிலையானது அல்ல; அது மாறிக்கொண்டே இருக்கும். பணத்தை தாண்டி பல விஷயங்கள் உலகில் உள்ளன.
இவ்வவாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -