Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/மண்ணை மேம்படுத்தும் பசுந்தாள் உரங்கள்

மண்ணை மேம்படுத்தும் பசுந்தாள் உரங்கள்

மண்ணை மேம்படுத்தும் பசுந்தாள் உரங்கள்

மண்ணை மேம்படுத்தும் பசுந்தாள் உரங்கள்

PUBLISHED ON : மே 01, 2024


Google News
Latest Tamil News
தீவிர பயிர் சாகுபடி முறையால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து மண்ணின் இயற்கை தன்மை மாறுபட்டு மண்வளம் குறைந்து கொண்டே வருகிறது.

மண்ணின் இயற்பியல், ரசாயன தன்மை மாறும் போது எந்த வகையான உரம் கொடுத்தாலும் அது பயிருக்கு சரியாக கிடைக்காது. ஆண்டுக்கு ஒரு முறை பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுவதால் மண்வளம் அதிகமாகி விளைச்சலும் பெருகும். இவை நேரிடையாகவும் மறைமுகமாகவும் மண்வளத்தை பெருக்கி உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது.

பசுந்தாள் உரங்கள் பயறுவகை குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை காற்றிலிருந்து தழைச்சத்தை கிரகித்து 20 முதல் 40 கிலோ வரை ஒரு எக்டேர் நிலத்தில் உள்ள மண்ணில் நிலைநிறுத்தும் தன்மை கொண்டவை. மண்ணில் இயற்கையாக உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பெருகுவதற்கு உதவுகிறது.

பசுந்தாள் உரங்கள் மட்கும்போது வெளிவரும் அங்கக அமிலங்கள் மண்ணில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரித்து மண்ணின் அமைப்பை மேம்படுத்துகிறது. மண் கீழ் அடுக்கில் உள்ள சத்துகளை உறிஞ்சி மேற்பரப்பிற்கு கொண்டு வருவதால் அடுத்து சாகுபடி செய்யும் பயிர்கள் பயன்பெறுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்பு, பொட்டாசியம்,மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துகள் பயிருக்கு எளிதில் கிடைக்க உதவுகிறது.

வேகமாக வளரும் தன்மை

பசுந்தாள் உரப்பயிர்கள் வேகமாக வளர்வதோடு ஆழமான வேர் அமைப்புடன் மென்மையான தண்டு பகுதியை கொண்டிருக்க வேண்டும். வறட்சி, அதிகநீர் மற்றும் வெப்பநிலை மாறுபாடு, பூச்சி நோய்களை தாங்கி வளரும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். வளிமண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை விரைவில் நிலைநிறுத்தும் தன்மை, அதிக வேர்முடிச்சுகளை கொண்டிருக்க வேண்டும்.

பசுந்தாள் உரப்பயிர்களின் வகைகள்

சணப்பு, செஸ்போனியா, கொளுஞ்சி போன்ற பசுந்தாள் உரப்பயிர்கள் நிலத்தில் விதைக்கப்பட்டு 40 - 45 நாட்கள் கழித்து பூக்கும் நேரத்தில் அவற்றை மடக்கி உழவேண்டும். புங்கம், வேம்பு, எருக்கு மற்றும் கிளாசிடியா பயிர்களின் இலைகள் மற்றும் மெல்லிய தண்டுப்பகுதிகள் வேறு இடத்திலிருந்து வெட்டி எடுத்து நிலத்தில் இட்டு உழவு செய்ய வேண்டும். இவை பசுந்தாள் இலைஉரப்பயிர்கள் எனப்படும்.

பசுந்தாள் சாகுபடிமுறை

சித்தகத்தி பசுந்தாளை எல்லாப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம் என்றாலும் மார்ச், ஏப்ரல் சிறந்த பருவம். அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது. ஒரு எக்டேருக்கு 30 - 40 கிலோ விதை தேவை. ரைசோபியம் நுண்ணுயிர் 5 பாக்கெட்டுகள் அளவு எடுத்து விதை நேர்த்தி செய்த பின் விதைக்க வேண்டும். 40 க்கு 20 செ.மீ என்ற அளவில் பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.

15 - 20 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் வேர்முடிச்சுகளின் எண்ணிக்கை அதிகமாகும். விதைத்து 45 - 50-வது நாளில் பூக்கும் நேரத்தில் மடக்கி உழவேண்டும். எக்டேருக்கு 20 டன் அளவு பசுந்தாள் உயிர்ப்பொருட்கள் கிடைக்கும்.

சணப்பை சாகுபடி

அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. எக்டேருக்கு 25 - 35 கிலோ தேவை. 5 பாக்கெட் ரைசோபியத்துடன் கலந்து விதைநேர்த்தி செய்து 30க்கு 10 செ.மீ. இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். 30 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சலாம். 45 - 60 நாட்களில் பசுந்தாளை மடக்கி உழலாம். எக்டேருக்கு 13 - 15 டன் பசுந்தாள் மகசூலாக கிடைக்கும். எக்டேருக்கு 50 கிலோ தக்கைப் பூண்டு விதை தேவை. 5 பாக்கெட் ரைசோபியம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். 15 - 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 45 - 60 நாட்களில் மடக்கி உழலாம். 25 டன் உயிர்ப்பொருட்கள் மகசூலாக கிடைக்கும்.

- மகேஸ்வரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு)

அருண்ராஜ், சபரிநாதன்தொழில்நுட்ப வல்லுநர்கள்

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி

96776 61410






      Our Apps Available On




      Dinamalar

      Follow us