Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

PUBLISHED ON : ஏப் 02, 2025


Google News
Latest Tamil News
பல ஆண்டுகள் பராமரித்து வளர்க்கும் தென்னை மரங்கள் பூச்சி, நோய் தாக்குதலால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சிவப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தி மரங்களை பாதுகாக்கலாம்.

காண்டாமிருக வண்டு, ஈரியோபைட் சிலந்தி, கருந்தலை புழு ஆகியவை மரங்களை தாக்கினாலும் மகசூலை மட்டுமே பாதிக்கின்றன. சிவப்பு கூன் வண்டு தாக்கினால் மரத்தையே இழக்க நேரிடும். ஐந்து முதல் 20 வயதுள்ள குருத்தழுகல், காண்டாமிருக வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரங்களையே இவை சேதப்படுத்துகின்றன. மழை காலங்களில் பிரச்னை அதிகரிக்கும். மரத்தின் தண்டுகளில் உள்ள காயத்தில் தாய் வண்டுகள் முட்டையிடும். அதிலிருந்து வெளி வரும் புழுக்கள் 55 - 60 நாட்கள் வரை தண்டின் உட்புற திசுக்களை தின்னும். பின்னர் தென்னை நாரை கொண்டு கூடு பின்னி கூட்டுப்புழுவாக 15 - 30 நாட்கள் வாழ்ந்து வண்டாக வெளி வரும்.

தாக்குதலின் அறிகுறிகள்: மரத்தில் ஓட்டைகளும் ஓட்டைகள் வழியே திசுக்களைத் தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநார்களும் காணப்படும். புழுக்கள் உட்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் இருக்கும். தண்டின் சோற்றுப்பகுதி துவாரங்களாக காணப்படும். மரங்களின் நுனிப்பகுதி அழுகி துர்நாற்றம் வீசும். தாக்குதல் அதிகரித்தால் உட்புற ஓலைகள் மஞ்சள் நிறமாகி கொண்டைப்பகுதி முறிந்து மரம் பட்டுவிடும்.

மேலாண்மை முறை: பராமரிப்பில்லாத தோப்பு மரங்களே இதன் இலக்கு என்பதால் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி எரிக்கவேண்டும். ஆண் வண்டின் வாசனையை வெளியிடும் இனக்கவர்ச்சி பொறிகளை எக்டேருக்கு ஐந்து வீதம் வைத்தால் பெண் வண்டுகள் பொறியில் மாட்டிக்கொள்ளும். அவற்றை அழித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

பாதிக்கப்பட்ட மரங்களில் மேலே உள்ள துளையைத் தவிர மற்றதை அடைக்கவேண்டும். துளை வழியே புனல் மூலம் ஒரு சதவீத கார்போரைல் அல்லது 0.2 சதவீத டிரைகுளோர்பானை மரம் ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றி துளையை அடைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை செய்யலாம். கொண்டைப் பகுதியில் தாக்குதல் இருப்பின் ஓலைகளை சுத்தம் செய்து பூச்சிக்கொல்லி கரைசலை ஊற்றவும். தண்டில் துளைகள் இருந்தால் அவற்றை தார் அல்லது சிமென்ட் பூச்சு மூலம் அடைக்கலாம். ஆக்கர் கருவி மூலம் துளையிட்டு அதில் புனல் வைத்து மருந்தை ஊற்றலாம்.

மணலுடன் வேப்பங்கொட்டைப்பொடி 2:1 என்ற வீதத்தில் கலந்த கலவை அல்லது லின்டேன் 1.3 கிராம் மற்றும் மணல் கலந்து விரவி மட்டை இடுக்குகளில் 3 மாதத்திற்கு ஒருமுறை வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூண் வண்டு முட்டை இடுவதைத் தவிர்க்கலாம்.



-அருண்ராஜ் (மண்ணியல் துறை),மகேஸ்வரன் (உழவியல்) தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us