Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: அம்மாவின் அணைப்பில் மகன்!

விசேஷம் இது வித்தியாசம்: அம்மாவின் அணைப்பில் மகன்!

விசேஷம் இது வித்தியாசம்: அம்மாவின் அணைப்பில் மகன்!

விசேஷம் இது வித்தியாசம்: அம்மாவின் அணைப்பில் மகன்!

PUBLISHED ON : பிப் 16, 2025


Google News
Latest Tamil News
முருகப் பெருமானை பால முருகனாக தனியாகவோ, வள்ளி, தெய்வானையுடனோ தரிசித்திருப்பீர்கள். ஆனால், அவர் தந்தை மீது கொண்ட பயத்தில், தன் அன்னையின் இடுப்பில் அமர்ந்திருக்கும் அரிய காட்சியைக் காண வேண்டுமா? மயிலாடுதுறை அருகிலுள்ள, வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி கோவிலுக்கு வாருங்கள். அய்யனார் எனப்படும் சாஸ்தா அவதாரம் செய்த திருத்தலம் என்ற சிறப்பும், இவ்வூருக்கு உள்ளது.

தாருகாவனம் என்ற காட்டில், தங்கள் துணைவியருடன் இணைந்து யாகம் செய்து, சிவனை மகிழ்வித்தனர், பல ரிஷிகள். அதே நேரம் தங்கள் யாகத்தால் தான், சிவனே நன்றாக இருக்கிறார் என, ஆணவம் கொண்டனர்.

இவர்களது ஆணவத்தை அடக்க, மாறுவேடத்தில் பிட்சாடனர் என்ற பெயரில், காட்டுக்குள் வந்தார், சிவன். அவரது அழகில் மயங்கிய ரிஷிகளின் துணைவியர், அவர் பின்னே சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்த ரிஷிகளால் முடியவில்லை.

யாக குண்டத்தில் தோன்றிய மத யானையை, சிவன் மீது ஏவினர். அந்த யானையின் தோலை உரித்து இடுப்பில் கட்டிக் கொண்டார், சிவன். வந்தவர், தெய்வசக்தி உள்ளவர் என்பதை உணர்ந்த ரிஷிகள், பிட்சாடனர் காலில் விழுந்தனர்.

தன் சுயரூபத்தைக் காட்டினார், சிவன். ரிஷிகளின் ஆணவம் நீங்கியது. யானையை சம்ஹாரம் செய்தவர் என்பதால் இவருக்கு, 'கஜசம்ஹார மூர்த்தி' என, பெயர் வந்தது. கஜம் என்றால் யானை.

சிவன், பிட்சாடனராக வந்தபோது, இத்தலத்துக்கு மோகினி அவதாரத்தில் வந்தார், விஷ்ணு. அவர்களுக்கு சாஸ்தா பிறந்தார். எனவே, இவ்வூரே சாஸ்தா பிறந்த தலமாக கருதப்படுகிறது. மற்ற கோவில்களில், சிவனின் திருவடிகளின் மேல்பாகம் நமக்கு தெரியும். இங்கு சிவனின் உள்ளங்காலை தரிசிக்கலாம்.

யானைத் தோலை போர்த்தி, இடது உள்ளங்காலை உயர்த்திக் காட்டிய நிலையிலுள்ள, கஜசம்ஹார சிற்பம் வேறு எங்கும் காண இயலாதது.

இந்த காட்சியைக் கண்டு, பார்வதிதேவி பயந்து போனாளாம். அவள் அச்சத்துடன் குழந்தை முருகனுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என, இடுப்பில் முருகனை, அணைத்து வைத்துக் கொண்டாள். குழந்தை முருகனும், பயத்தில், தன் தந்தையின் கோப ரூபத்தை கை நீட்டி காட்டி, தாயிடம் சொல்வது போல, சிற்பம் வடித்துள்ளனர்.

சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிச்சிறப்பு. இந்த தீர்த்த நீரை தலையில் தெளித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் இளங்கினை நாயகி சன்னதி முன், சரஸ்வதி தீர்த்தம் உள்ளது. இந்த நீரை தலையில் தெளித்தால் கல்வியில் சிறந்து விளங்குவர்.

கஜசம்ஹார மூர்த்தியின் பின்புறம், யந்திரம் உள்ளது. சுவாமியின் உக்கிரத்தை தணிக்க இது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில், 21 கி.மீ., துாரத்தில், நெய்க்குப்பை என்ற ஊர் உள்ளது. இங்கு பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரம் சென்றால், கோவிலை அடையலாம்.

தி. செல்லப்பா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us