Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல

இதப்படிங்க முதல்ல

இதப்படிங்க முதல்ல

இதப்படிங்க முதல்ல

PUBLISHED ON : மார் 24, 2024


Google News
Latest Tamil News
விக்ரமின், மவுன புரட்சி!

பா.ரஞ்சித் இயக்கிய, தங்கலான் படத்தை அடுத்து, அருண்குமார் இயக்கும், தன், 62வது படத்தில் நடித்து வருகிறார், விக்ரம்.

முன்பெல்லாம் மற்ற நடிகர், நடிகையருடன் ஜாலியாக அரட்டை அடிக்கும், விக்ரம், சமீபகாலமாக, படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்து விட்டால், மாலை, 'பேக்கப்' ஆகும் வரை, தேவை இல்லாமல் யாரிடமும் பேசுவதில்லை.

படத்தில் நடிக்கும் கதாபாத்திரமாகவே காணப்படுகிறார். தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு, முழுமையாக உயிர் கொடுக்க, அதன் தன்மைக்கேற்ப மாறப் போவதாக கூறுகிறார். — சினிமா பொன்னையா

மீண்டும் சிம்புவுடன் நடிக்க ஆசைப்படும், த்ரிஷா!

சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து நடித்த, விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெற்றியடைந்து, இளைஞர்களின், 'பேவரட்' படமாகவும் மாறியது. அதன்பின், அவர்கள் இருவருக்குமே அது போன்ற ஒரு காதல் கதை அமையவில்லை.

இந்நிலையில், 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின், 96 என்ற படத்தில், காதல் கதையில், விஜய்சேதுபதியுடன் நடித்தேன். அந்த படம், மனதளவில் திருப்தியை கொடுத்தது.

'இருப்பினும், விண்ணைத்தாண்டி வருவாயா போன்று, இன்னொரு, 'ரொமான்டிக்' கதையில், சிம்புவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், எனக்கு உள்ளது. அப்படியொரு வாய்ப்பை தான் எதிர்நோக்கி இருக்கிறேன்...' என்கிறார், த்ரிஷா.

— எலீசா

பின்னணி பாடகராக உருவெடுத்த, விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில், விஜய், தனுஷ், ஸ்ருதிஹாசன் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட, பல நடிகர் - நடிகையர் பின்னணி பாடி வருகின்றனர்.

தற்போது, மாஸ்டர் மகேந்திரன் நடித்து வரும், கரா என்ற படத்திற்காக, ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறார், விஜய் சேதுபதி. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்து, விஜய், தனுஷ் பாணியில், தன் படங்களிலும், தானே அவ்வப்போது பின்னணி பாட திட்டமிட்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

ராஷ்மிகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த, ரசிகர்கள்!

சமீபத்தில், விருது விழா நிகழ்ச்சிக்காக, ஜப்பான் நாட்டில் உள்ள, டோக்கியோவுக்கு சென்றார், ராஷ்மிகா மந்தனா.

அங்குள்ள விமான நிலையத்தில், இவர் நடித்த, புஷ்பா படத்தின் புகைப்படங்களை வைத்து, வரவேற்பு கொடுத்தனர். அதோடு அப்படத்தில், அவர் நடித்த சில காட்சிகளை கோடிட்டு காட்டி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக பெருமைப்படுத்தி உள்ளனர்.

இதனால், மிகுந்த உற்சாகமடைந்த, ராஷ்மிகா, 'அடுத்து, நேரடியாக ஜப்பான் மொழிப் படங்களில் நடித்து, அங்குள்ள ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளேன்...' என்கிறார். — எலீசா

கறுப்புப் பூனை!

பிரபல மூன்றெழுத்து, பூ நடிகையின் கணவர் இயக்கிய, நான்காம் பாக, 'ஹாரர்' படத்தின் கதை, ஏற்கனவே அரைத்த மாவு என்பதால், இன்னமும் வியாபாரமாகவில்லை. அதனால், தான் இயக்கிய இன்னொரு காமெடி படத்தின், மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு, சில நடிகர்களிடம், 'கால்ஷீட்' கேட்டார்.

ஆனால், அவரது முந்தைய படமே போணியாகாமல் உள்ளதால், அடுத்து, அவர் இயக்கும் படமும் இப்படித்தான் கிடப்பில் போகும் என்று சொல்லி, மார்க்கெட்டில் இருக்கும் எந்த, 'ஹீரோ'களும் அவரிடம் சிக்காமல் நழுவி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

    

சினி துளிகள்!

* காந்தாரி என்ற படத்தில், நரிக்குறவ பெண், அறநிலையத்துறை அதிகாரி என, இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார், ஹன்சிகா.

* தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டே, ஹிந்தி, 'வெப் சீரியல்'களிலும் நடிக்க துவங்கி இருக்கிறார், நிவேதா பெத்துராஜ்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us