PUBLISHED ON : மார் 22, 2026

மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் 1993ல், அறிவிக்கப்பட்ட இந்த தினம், துாய நீர் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தினத்தின் முக்கிய முழக்கம், 'நீரைப் போற்றுவோம், வீணாக்காமல் காப்போம்!' என்பதாகும்.
பூமியின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டிருந்தாலும், மனிதர்கள் பயன்படுத்தக் கூடிய நன்னீர் மிகக் குறைவான அளவே உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்களுக்கு, இன்னும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.
உலக தண்ணீர் நாள், நாம் ஒவ்வொருவரும் நீரை சேமிக்க எடுக்க வேண்டிய சிறிய நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது...
மழைநீர் சேகரிப்பு:
ம ழைநீரைச் சேமிப்பது நிலத்தடி நீரை மேம்படுத்தவும், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் மிக முக்கியம். தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் பரவலாகச் செயல்படுத்தப்படுவது பாராட்டத்தக்கது.
விவசாயத்தில் சிக்கனம்:
நீ ர்ப்பாசனத்திற்காகப் பயன்படுத்தப்படும் நீரின் அளவைக் குறைக்க, சொட்டுநீர்ப்பாசனம் போன்ற நவீன விவசாய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
வீட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்:
வீ ட்டில் பயன்படுத்திய நீரை தோட்டத்திற்கு அல்லது பிற தேவைகளுக்கு மறுசுழற்சி செய்யலாம். குளிக்கும் நேரத்தைக் குறைத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, பல் துலக்கும்போது, தண்ணீர் வீணாகாமல் குழாயை மூடுவது போன்ற சிறிய பழக்கவழக்கங்கள்கூட, நீர் வீணாவதை தடுக்க முடியும்.
தொழில்துறை பொறுப்பு:
தொ ழிற்சாலைகள் நீரை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பயன்படுத்திய நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.
நீர் குறித்த விழிப்புணர்வை இளம் வயதிலிருந்தே ஏற்படுத்துவது மிகவும் அவசியம். நீர் பொதுச் சொத்து என்றும், அதை வீணாக்குவது சமூகத்திற்குக் கேடு என்றும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். நீர் மாசுபாட்டைத் தவிர்ப்பது பற்றிய புரிதலையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்
முக்கியத்துவத்தையும் வலியுறுத்த வேண்டும்.
உ லக தண்ணீர் நாள், நீரின் மதிப்பை வெறும் பொருளாதார ரீதியாக அல்லாமல், வாழ்வின் அடிப்படையாக நாம் உணர வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
நீர் ஆதாரத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் நீரின் ஒவ்வொரு துளியையும் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே, நம் எதிர்கால சந்ததி நீர் தட்டுப்பாடு இன்றி வாழ வகை செய்ய முடியும்.
- எஸ். அமிர்தவர்ஷினி





