Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: வந்த நாள் முதல்!

கவிதைச்சோலை: வந்த நாள் முதல்!

கவிதைச்சோலை: வந்த நாள் முதல்!

கவிதைச்சோலை: வந்த நாள் முதல்!

PUBLISHED ON : பிப் 09, 2025


Google News
Latest Tamil News
* என்றோ ஒருநாள் எதேச்சையாகத்தான் பார்த்தேன்

ஏனோ தானோ என்று தான் படிக்கத் துவங்கினேன்

அன்றிலிருந்து தான் அதற்கு ஒரு இடமளித்தேன்

இதயத்தில் அதொரு இணையில்லா இதழென்று!

இது உங்கள் இடமென்று இல்லங்கள் தோறும்

உரிமையோடு வலம் வருவதால் இதயம் பூத்த

இன்முகத்தோடு எழுத முடிகிறது எங்கள் கதைகளை

அதனால் அறிய முடிகிறது எங்கள் திறமைகளை!

என்றோ இருந்தவர்கள் தானே என்று இருந்து விடாமல்

இறந்தவர் வாழ்க்கை வரலாற்றை கூறுவதால்

இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டியாய் அமைகிறது

அதனால், தெளிவடைகிறது கலங்கிய வாழ்க்கை!

பசுமை சாலை எனும் பயிர் வளர்த்து பசி போக்கி

பால் வளம் பெருக்க பசுக்களை வளர்ப்பது போல்

கவிதைச்சோலை என்னுமழகிய அரங்கம் அமைத்து

கற்று வரும் கவிஞர்களை அரங்கேற்றி ஆசிர்வதிக்கிறது!

கூண்டுக்குள் அடைபட்டுப் போன பச்சை கிளிகளுக்கு

பதுக்க பதுக்க பேச்சு சொல்லிக் கொடுப்பது போல்

குறுக்கெழுத்து போட்டி வச்சு பட்டி தொட்டி எல்லாம்

வாக்கு வளத்தை வளர்த்து வாசிக்கச் செய்கிறது!

அதன் எழுத்துக்களும், கருத்துக்களும் என்றென்றும்

எழுதப்படாத பத்திரங்களாக பத்திரமாக இருக்கிறது

அதன் சொற்களும், சொலவடைகளும் சொர்க்கத்திலும்

சொல்லப்படாத முத்திரைகளாகி முகவரியாக திகழ்கிறது!

அது புரட்ட புரட்ட பொன் முட்டையிடும் பெட்டகம்

படிக்க படிக்க பசி துாண்டும் பட்டுப்பூ பாடப்புத்தகமது

பட்டழகு போர்த்திய எழுத்துக்களின் இலக்கணமது

பார்த்தவுடன் படிக்கத் துாண்டும் பண்பாட்டு களஞ்சியமது!

சுந்தரப்பொன் சொல்லாலான கனித்தட்டு காவியமது

சுவைக்கனி பொதி மலர்ந்த கற்கண்டு கவிமாடமது

சுந்தரப்பெண் போலான விந்தைமிகு சுடரோவியமது

சுத்தத் தேனுக்கு மேலான சிந்தி விழும் சுவையோவியமது!

வசந்த காலத்தைப் போல் வாசல் முற்றம் வந்து

வாசிப்பு நேசத்தை வளர்த்தெடுக்கும் வாரமலரிதழே

வானம் வரை நீயுயர்ந்து வாடாத மல்லிகை போல்

வாசம் வீசிட வாழ்த்துமெம் நெஞ்சம் நீ வந்தநாள் முதலே!

— க.அழகர்சாமி, கொச்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us