Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேழமலைக்கோட்டை! (15)

வேழமலைக்கோட்டை! (15)

வேழமலைக்கோட்டை! (15)

வேழமலைக்கோட்டை! (15)

PUBLISHED ON : ஜூன் 08, 2024


Google News
Latest Tamil News
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில், இளவரசர் மாயமானார். அப்போது, நாட்டின் எல்லை காட்டில் நடமாடிய எதிரிகளை முறியடிக்க முயற்சி நடந்தது. எதிரிகளை சிறை பிடிக்க சென்ற படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. படையை நகர்த்த புதிய வியூகத்தை கூறினார் வைத்தியர். இனி -

'காட்டின் தென் பகுதியில் இருந்து கோட்டை நோக்கி வட திசையில் வீரர்களை நகர்த்த என்னிடம் ஒரு யோசனை உள்ளது...'

இதை முன் வைத்த வைத்தியரை மற்றவர்கள் நிமிர்ந்து பார்த்தனர்.

'தென்திசையில் காட்டையடுத்து இருக்கும் களநில நாட்டுக்கு, நம் வீரர்களில் சிலரை, வணிகர்கள் போல் மாறுவேடத்தில் அனுப்பி, அந்த நாட்டு மன்னரிடம் போர் உதவி கேட்கலாம்...'

'அது எப்படி சாத்தியம்... போருக்கு உதவி செய்தால், அவருக்கு கைமாறு செய்ய வேண்டி இருக்குமே...'

'போர் உதவி என்றால், நமக்கு வீரர்களோ, ஆயுதங்களோ தந்து உதவ வேண்டியதில்லை. தனித்தனியாக செல்லும் வீரர்கள் அங்கு, குழுவாக இணைந்து, நம் கோட்டையை நோக்கி வர அனுமதித்தால் போதும்...'

'அதாவது, நாம் கேட்கும் உதவி, நம் படை வீரர்களுக்கான தற்காலிக இட வசதி மட்டுமே... அப்படித்தானே வைத்தியரே...'

'ஆம் அமைச்சரே...'

வைத்தியரை தவிர, மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

'இது சாத்தியமா...' என்றார் ராஜகுரு.

தளபதி பதில் கூறும் முன், குறுக்கிட்ட அமைச்சர், 'சாத்தியமா, இல்லையா என்பது, ஒரு புறம் இருக்கட்டும். இந்த யோசனை ஏற்புடையதா என்பதை கூறுங்கள் ராஜகுருவே...' என்றார்.

மறுப்பு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் ராஜகுரு.

அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடி கொண்டிருந்தன.

அமைச்சரே மீண்டும் தொடர்ந்தார்.

'சாத்தியமா, சாத்தியம் இல்லையா என்பதை முயற்சித்து பார்த்து விடலாமே... களநில மன்னர்களுக்கு, தனி தனியாக துாது அனுப்பி பார்க்கலாம்; அவர்களில், எவரேனும் ஒருவர், உதவ முன் வந்தால் ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை இருக்க போகிறது...'

அமைச்சரை உற்று பார்த்தார் ராஜகுரு. பின், தளபதியிடம் திரும்பினார்.

'உங்கள் கருத்து என்ன தளபதி...'

'வைத்தியர் சொல்லும் யோசனை நன்றாக தான் இருக்கிறது. களநில மன்னர்களில் ஒருவரை அணுகி பார்க்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை என நினைக்கிறேன். உதவ முன் வந்தால், சிறுக சிறுக நம் வீரர்களை அங்கே அழைத்து சென்று, ஒரு படைக்குழுவை உருவாக்கி வடக்கு நோக்கி நகரலாம்...

'அதேசமயம், கோட்டையில் இருந்து தெற்கு நோக்கியும், ஒரு படைக்குழுவை அனுப்பலாம். தற்போது, களமிறங்கி இருக்கும் எதிரி நாட்டினர் இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கி கொள்வது உறுதி...' என்றார்.

'களநில மன்னரை யார் அணுகுவது, எப்படி அணுகுவது...'

யோசனையாக கேட்டார் ராஜகுரு.

'மூவரும் ஒப்புக்கொண்டால், அதற்கான ஏற்பாட்டை நான் செய்கிறேன்...' என்றார் அமைச்சர்.

'அப்படியே செய்யுங்கள் அமைச்சரே...' என்றார் ராஜகுரு.

அமைச்சர் தளபதியிடம் திரும்பினார்.

'தளபதி... உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், இப்போதே களநில நாட்டு மன்னர் ராஜ சிவசைலத்தை அணுகுகிறேன்...'

'நல்லது. அவர் தான், நம் நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள மன்னர். அவர் உதவினால், வீரர்களை அங்கு அனுப்பி எளிதில் ஒரு படைக்குழுவை உருவாக்க முடியும்...'

உற்சாகமாக கூறினார் தளபதி.

களநில மன்னர்களில் ஒருவரான ராஜசிவசைலத்திற்கு, அமைச்சர் கொடுத்த ஓலையை எடுத்து, குதிரையில் புறப்பட்டான் துாதுவன்.

காட்டின் விளைபொருட்களை சேகரிக்க, குடிமக்கள் செல்லும் ஒற்றையடி பாதையில், குதிரை நிதானமாக நடை போட்டது. காட்டின் நடுப்பகுதிக்கு வந்த துாதுவனை இருவர் வழி மறித்தனர்.

'எங்கே செல்கிறாய்...'

'களநில நாட்டுக்கு வணிக வேலையாக செல்கிறேன்...'

'என்ன வணிகம்...'

'நான் ஒரு வைத்தியன். உயிர் காக்கும் மூலிகைகளை எடுத்து செல்கிறேன்...'

'எங்கே காட்டு...'

'அது, குப்பியில் அடைக்கப்பட்டிருக்கிறது; அதை திறந்தால், அதன் சக்தி குறைந்து விடும்...'

'கீழே இறங்கு...'

துாதுவனும் மறுப்பு சொல்லாமல் குதிரையிலிருந்து குதித்தான்.

'வா...'

'எங்கே...'

'எங்கள் தலைவரிடம்... நீ, இந்த காட்டை கடந்து, களநில நாட்டுக்கு செல்லலாமா என்பதை அவர் தான் தீர்மானிப்பார்...' என்று கூறி, துாதுவனை காட்டுக்குள் அழைத்து சென்றனர்.

அன்று மாலை -

களநில மன்னருக்கு ஓலை எடுத்து சென்ற துாதுவன், சற்றும் எதிர்பாராத வகையில் நாடு திரும்பியிருந்தான்.

'என்ன நடந்தது...' கேட்டார் ராஜகுரு.

'களநில நாட்டுக்கு செல்லும் வழியில் இரண்டு பேர் வழிமறித்தனர். அவர்களை பார்த்தால் போர் பயிற்சி பெற்றவர்கள் போல் தோன்றியது. சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்த நான் ஒன்றும் தெரியாதது போல் நின்றேன். அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு எல்லாம் பதில் கூறினேன்...'

நடந்த விஷயங்களை விவரித்தவன் தொடர்ந்தான்...

'அவர்களுக்கு ஒத்துழைப்பது போல உடன் சென்றேன். ஒரு சந்தர்ப்பத்தில் தப்பி புதர்களுக்குள் புகுந்து மறைந்து திரும்பி வந்து விட்டேன்...'

'ஓலை...'

'அது பத்திரமாக இருக்கிறது...'

'அவர்கள் உன்னை சோதனையிடவில்லையா...'

'சோதனையிட முயலும் முன், நான் தப்பி விட்டேன் அமைச்சரே...'

சொன்னவனை அமைச்சரும், தளபதியும் நம்பாமல் பார்த்தனர்.

'அது எப்படி... உன்னை அழைத்து சென்றவர்கள் அவ்வளவு துாரம் விசாரித்து எந்த சோதனையும் செய்யாமலா இருந்தனர்...'

அமைச்சரின் கேள்வியில் பலத்த சந்தேகம் இருந்தது.



- தொடரும்...

- ஜே.டி.ஆர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us