Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செவிக்கு உணவு!

செவிக்கு உணவு!

செவிக்கு உணவு!

செவிக்கு உணவு!

PUBLISHED ON : ஏப் 20, 2024


Google News
Latest Tamil News
சித்தர்காடு கிராமத்தில் வாழ்ந்து வந்தார் புலவர் ராமலிங்கர்; கல்வியில் சிறந்து விளங்கினார். அறிவாற்றலில் மேன்மை பெறும் விதமாக, மகன் கேசவனை வளர்த்து வந்தார்.

அரசுப் பள்ளியில், 6ம் வகுப்பில் படித்தான். சிறிய பாடல்கள் எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தான். படிப்பிலும் தீவிர அக்கறை காட்டி வந்தான்.

சில நாட்களாக கவலையுடன் இருந்தான் கேசவன்.

இதை கவனித்து, ''முகத்தில் வாட்டம் தென்படுகிறதே... என்ன காரணம்...'' என்றார் தந்தை.

''தவறாக எண்ணாவிட்டால், என் சந்தேகத்தை கேட்கிறேன்...'' என்றான் கேசவன்.

''கேட்டால் தான் பிரச்னை தீரும்...''

''உடன் படிக்கும் மாணவர்கள், பள்ளிக்கு விதவிதமாக உணவு எடுத்து வருகின்றனர்; நாமும், வசதியாக தான் வாழ்கிறோம்; அவர்கள் போல், எனக்கும் உணவை தயார் செய்து கொடுத்து அனுப்பலாமே...''

''செய்து தரலாம்; அதற்கு முன், நான் கேட்கும் கேள்விகளுக்கு, பதிலை சொல்...'' என்றபடி, ''கோவிலுக்கு ஏன் போகிறோம்...'' என்றார் தந்தை.

''இறைவனை வணங்கி நல்லறிவு பெற வேண்டும் என்பதற்காக செல்கிறோம்...''

''திரைப்படத்திற்கு எதற்கு செல்கிறோம்...''

''மகிழ்ச்சியாக பொழுது போக்க போகிறோம்...''

''உடற்பயிற்சி கூடத்திற்கு எதற்கு செல்கிறாய்...''

''உடல் நலம் பெறவும், உறுப்புகள் சீராக இயங்கவும் செல்கிறேன்...''

''சரி... பள்ளிக்கு, எதற்கு செல்கிறாய்...''

''கல்வியறிவு பெறவும், அறிவு விருத்தியடையவும் செல்கிறேன்...''

''பள்ளிக்கு செல்வது, நன்கு சாப்பிட இல்லையே...''

இந்த கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் திக்கி திணறினான் கேசவன்.

'செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்' என்ற திருக்குறளை உணர்த்தி, ''வகுப்பில் ஆசிரியர் போதிப்பதை கவனமுடன் கற்று, நல்லறிவு, ஒழுக்கத்துடன் சிறந்து விளங்குவதை லட்சியமாக கொள்...'' என்று அறிவுரைத்தார்.

தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டான்; கல்வியின் அவசியத்தை உணர்ந்தான் கேசவன்.

குழந்தைகளே... கல்வி அழியாத செல்வம்; அதை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்!

- ஆர்.தனபால்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us