Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பரிசு சீட்டு!

பரிசு சீட்டு!

பரிசு சீட்டு!

பரிசு சீட்டு!

PUBLISHED ON : பிப் 03, 2024


Google News
Latest Tamil News
கருமத்தான்பட்டி கிராமத்தில் பெற்றோருடன் வசித்தாள் சுதா. பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தாள். தங்கை தீபா, 8ம் வகுப்பு படித்தாள். தந்தையும், தாயும் கூலி வேலை செய்து, இருவரையும் படிக்க வைத்தனர்.

திடீரென தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது.

அம்மாவை கவனமாக கவனித்து உதவிகள் செய்தனர் சிறுமியர். குணம் அடைய வேண்டி, ஒவ்வொரு வாரமும், பிரார்த்தனை செய்வதை வழக்கமாக்கினர்.

உடல் தளர்ந்த நிலையிலும் அவ்வபோது, மகள்களுக்கு அறிவுரை கூறி வந்தார் அம்மா. அதை பின்பற்றி கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர்.

தேயிலை தோட்டத்தில், கூலி வேலை செய்தார் அப்பா முத்து. அன்று, பணி முடிந்து, வீட்டுக்குள் நுழைந்தார். சம்பாதித்த பணத்தை மகள் சுதாவிடம் கொடுத்தார்.

வழக்கமாக தருவதை விட பணம் குறைவாக இருந்தது.

அப்பா, உழைத்து கொண்டு வரும் பணத்தில் சிறிதளவு ஒவ்வொரு வாரமும், தபால் நிலையத்தில் சேமித்தாள் சுதா. அன்று பணம் குறைவாக இருந்தது குறித்து விசாரித்தாள். நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பி, சமாளித்தார் அப்பா.

ஒரு நாள் -

அப்பாவின் சட்டை பைக்குள், பணம் எடுக்க கை விட்டாள் தீபா.

அதற்குள் லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டாள். அது குறித்து வினவினாள்.

''லாட்டரி சீட்டுகள் வாங்குவதால் பரிசு கிடைக்கும். அது தான், கஷ்டத்தில் இருந்து நம்மை விடுவிக்க போகுது...''

பெரும் ஆர்வத்துடன் கூறினார் அப்பா.

''ஓஹோ... இதை வாங்குவதில் தான் பணத்தை செலவிடுகிறீர்களா...''

கோபத்தை மறைத்து நிதானமாக கேட்டாள் சுதா.

''ஆமாம்... நான் சம்பாதிக்கும் பணத்தில், உங்க ரெண்டு பேருக்கும் மேற்படிப்பு, சொந்த வீடு, அம்மாவின் மருத்துவச் செலவு எல்லாம் ஈடு கட்ட முடியுமா... லாட்டரி சீட்டு வாங்கினால் பரிசு விழும்; அது, வாழ்க்கை நிலையை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கு கண்ணு...''

''லாட்டரி சீட்டு வாங்கும் பணத்தை என்னிடம் கொடுங்கள். அதை, ஒரு உண்டியலில் போட்டு சேர்த்து தருகிறேன்; இனி, இம்மாதிரி செய்யாதீங்க...''

அன்புடன் எச்சரித்தாள் சுதா. அதை மனதில் பதித்தார் அப்பா.

ஒரு மாதத்துக்கு பின் -

உண்டியல் பணத்தை எண்ணிப் பார்த்தார் முத்து. பெரும் தொகை சேர்ந்திருந்தது.

ஆச்சரியத்தில், 'இனி ஒரு போதும், லாட்டரி சீட்டு வாங்க மாட்டேன்' என சபதம் எடுத்தார்.

அவரது மனமாற்றம் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தது குடும்பம்.

பட்டூஸ்... அறிவு, திறமை, உழைப்பு தான் முன்னேற்றத்துக்கு உதவும். பரிசு சீட்டு போன்ற குறுக்கு வழிகள் ஆபத்தானது. அவற்றை நாடக் கூடாது!

சோ.ராமு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us