Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பயன் வாழ்க்கை!

பயன் வாழ்க்கை!

பயன் வாழ்க்கை!

பயன் வாழ்க்கை!

PUBLISHED ON : ஜன 20, 2024


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, துாய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், 1979ல், பிளஸ் 1 படித்த போது தமிழாசிரியராக இருந்தார் சவுந்தரராஜன்; அருமையாக பாடம் நடத்துவார்.

அன்று, ஆய்வுக்காக கல்வி அலுவலர் குழு வந்திருந்தது. வகுப்பில், தமிழ் துணைப்பாடம் நடத்திக் கொண்டிருந்தார் தமிழாசிரியர். அப்போது, எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறுகதையில் வரும் மையக்கரு குறித்து, கேள்வி எழுப்பினார் கல்வி அலுவலர்.

யாருக்கும் பதில் சொல்ல தெரியவில்லை.

அடுத்து, 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி...' என்ற பாடலுக்கு, பொருள் கூற கேட்டார். வரிசையாக, ஆறு பேர் பதில் சொல்லவில்லை.

தர்மசங்கடத்தில் நெளிந்தார் ஆசிரியர். தொடர்ந்து, 'யாராவது அந்த பாடலுக்கு பொருள் கூறலாம்...' என, பொதுவாக வாய்ப்பு கொடுத்தார் கல்வி அலுவலர்.

நான் எழுந்து, 'நாலாறு என்பது நான்கு கூட்டல் ஆறு எனலாம். இது, குழந்தை கருவில் இருக்கும், 10 மாத காலத்தை குறிக்கும். இப்படி அரிதாக உள்ள மானிடப் பிறவியை பயன் மிக்கதாக வாழ அறிவுரைக்கும் சித்தர் பாடல்...' என்றேன்.

புன்னகை தவழ பாராட்டினார் கல்வி அலுவலர். ஆசிரியரும் மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த ஆண்டு இறுதி தேர்வில் தமிழ்ப்பாடத்தில், பள்ளியிலேயே முதன்மை மதிப்பெண் பெற்றேன். பள்ளி நுாற்றாண்டு விழாவில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கைகளால் பரிசு பெற்றேன்.

எனக்கு, 59 வயதாகிறது; தமிழக வேளாண்மை துறையில், இணை இயக்குனராக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். என் தமிழார்வம் வேளாண் விரிவாக்க பணிகளில் பெரிதும் உதவி நற்பெயர் பெற்று தந்தது. படிப்பதிலும், படைப்பதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன்.

- தி.சு.பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி.

தொடர்புக்கு: 94861 56442