Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனி விழும் திகில் வனம்! (14)

பனி விழும் திகில் வனம்! (14)

பனி விழும் திகில் வனம்! (14)

பனி விழும் திகில் வனம்! (14)

PUBLISHED ON : ஏப் 26, 2025


Google News
Latest Tamil News
முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. ஆபத்து என்ற எச்சரிக்கையை மீறி இமயமலையில் ஏறிய அவளது தந்தை துருவ், இறந்துவிட்டதாக அமைச்சகம் தெரிவித்தது. அதை ஏற்க மறுத்து வாதிட்டாள் மிஷ்கா. இனி -

அன்று அலைபேசியில், ''காலை வணக்கம் சிறுமியே...'' என்றார் அமைச்சக அதிகாரி.

''காலை வணக்கம். என் அப்பா கிடைத்தாரா, இல்லையா...''

கோபமாக கேட்டாள் மிஷ்கா.

''என்னம்மா புரியாமல் பேசுகிறாய். உன் தந்தையுடன், மலையேறிய மருத்துவர் உடல் காயங்களுடன் பிணமாய் மீட்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், மீதி ஐவரின் உடல்களும் வெள்ளிப்பனி மலையில் சிதறிக் கிடக்கும் என்று தானே அர்த்தம்...''

எந்த உணர்வும் இன்றி பதில் கூறினார் அதிகாரி.

''என் தந்தை காணாமல் போய் எத்தனை மணி நேரமாகிறது...''

விரக்தியுடன் கேட்டாள் மிஷ்கா.

''காணாமல் போய், 56 மணி நேரம் ஆகிறது...''

''காணாமல் போன மலையேறும் வீரர்கள், இதற்கு முன் அதிகபட்சம் எத்தனை நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளனர்...''

''மிகைல் மிரோனோவ் மற்றும் செர்ஜி மிரோனோவ் பாகிஸ்தான் சார்ந்த மலைப் பகுதியிலிருந்து, ஆறு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டனர்...''

''என் அப்பா எந்த பிரச்னையிலிருந்தும் மீளும் திறன் பெற்றவர். காணாமல் போய் இரண்டு மாதம் ஆன பின், உயிருடன் மீட்கப்படுவார்...''

நம்பிக்கையுடன் கூறினாள் மிஷ்கா.

''உன் நம்பிக்கை பிரமிக்க வைக்கிறது. ஆனால், யதார்த்தம் அப்படி இல்லையே...''

''அப்படி என்னவாக இருக்கிறது யதார்த்தம்...''

''கைப்பற்றப்பட்ட மருத்துவர் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தோம் இல்லையா...''

''போஸ்மார்ட்டம் என்றால் என்ன...''

''போஸ்ட்மார்ட்டம் என்பது இறந்தவர் உடலை கூர்ந்து ஆய்வு செய்வது. அதை ஆய்வு செய்யும் மருத்துவர்கள், விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிப்பர். அதை பிரேத பரிசோதனை அறிக்கை அல்லது பிணக்கூராய்வு அறிக்கை என்பர்...

''அது மரணத்துக்கான காரணத்தை விளக்கும். இது போன்ற உடல் கூராய்வு செய்யும் முறை முதன் முதலில், 1735ல் அறிமுகமானது. ஒரு மரணம், கொலையா, தற்கொலையா, விபத்தா, விஷக்கடியா எதனால் சம்பவித்தது என அறியும் பரிசோதனை இது...''

விளக்கம் அளித்தார் அதிகாரி.

''மருத்துவர் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து என்ன கண்டுபிடித்தீர்...''

''அவர் பனிப்புயலில் சிக்கி சாகவில்லை. ஒரு கொடூர மிருகம் கடித்து குதறித்தான் இறந்திருக்கிறார்...''

''அந்த மிருகத்தின் பெயர் என்ன...''

''கடித்த பகுதியல் உள்ள அச்சை வைத்து ஆராய்ந்து வருகின்றனர் நிபுணர்கள். கடித்த மிருகத்தின் பெயர் தெரியவில்லை...

''அந்த மிருகத்தை எதிர்த்து, மருத்துவர் ஒரு நொடி கூட போராடவில்லை. மின்னல் வேக தாக்குதலில் குரல்வளையை கடித்து விட்டது மிருகம்...''

''அந்த மிருகத்தின் செயல்திறனை பாராட்டுகிறீர்களா...''

கிண்டலாக கேட்டாள் மிஷ்கா.

அவளது கேள்வியை தவிர்த்து, ''சம்பவம் நடந்த பகுதியில் ஜியோ ஐ 1 என்ற உயர் தெளிவு திறன் மிக்க புவி கண்காணிப்பு செயற்கைகோள் எடுத்த பல படங்கள் கிடைத்துள்ளன. அந்த படங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். உன் தந்தை மற்றும் நால்வர் பனிப்புயலால் அடித்து செல்லப்பட்டிருப்பதை ஆதாரப்படுத்துகிறது செயற்கைகோள் படம்...''

''ஒரே நேரத்தில் காணாமல் போன ஆறு பேரில் ஒருவர் மிருகம் கடித்து இறந்திருக்கிறார். மீதி ஐவர் பனிப்புயலில் சிக்கி காணாமல் போயிருக்கின்றனர் என கூறுகிறீர்களே... இதில் சந்தேகம் தெரியவில்லையா...''

''வாய்ப்பு உண்டு... ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள் தரவுகளையும், ஹாக் ஐ 360 அனுப்பிய செயற்கைக்கோள் தரவுகளையும் நுண்ணியமாக ஆராய்ந்து வருகிறோம்...''

''அவ்வளவு தானா...''

கோபமாக கேட்டாள் மிஷ்கா.

''ஏ.எல்.ஐ., எனப்படும் 'அட்வான்ஸ்டு லான்ட் இமேஜர்' எனப்படும் மேம்பட்ட நில உருவங்களின் தொகுதிகளையும் ஆராய்ந்து வருகிறோம்...''

''இத்தனைக்கு பின்பும், என் தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லையா...''

''அது, 1,500 சதுர கி.மீ., பரப்புள்ள பகுதி. அங்கு ஐந்து குண்டூசிகளை தேடுகிறோம்...''

''எதற்கும் நேரடி பதில் சொல்லாது சமாளிக்கிறீர்...''

''உனக்கு தகவல்கள் சொல்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் பேச விருப்பம் இல்லாவிட்டால் சொல்... நேரடியாக அமைச்சரை பேச சொல்கிறேன். தேவைப்பட்டால் பிரதமரே பேசுவார்...''

''நீங்கள் தகவல் சொன்னால் போதும்...''

''மிஸ் மிஷ்கா... நுாற்றுக்கும் மேற்பட்ட ெஷர்பாக்கள் பல குழுக்களாய் பிரிந்து, உன் அப்பாவை தேடி வருகின்றனர்...''

''அவர்கள் என்ன கருவி வைத்து தேடுவர்...''

''பனியை ஊடுருவும் ரேடார் கருவியால் தேடுகின்றனர். இதை சுருக்கமாக ஜி.பி.ஆர்., என கூறுவர்...''

''வியாக்கியானமா பேசுறீங்க... காரியம் ஆகலையே...''

''நீ சுயநலக்காரி...''

''எப்படி...''

''இந்த குழுவினருடன் சென்று இறந்த மருத்துவர் உடலை பெற்றுக் கொள்ளும் அவரது உறவினர் எப்படி கதறுவர். உன் தந்தை காணாமல் தான் போயுள்ளார். உயிருடன் மீட்க வாய்ப்பிருக்கிறது என்பது போன்ற ஆறுதல் மருத்துவரின் உறவினர்களுக்கு இல்லையே...

''உன் தந்தையுடன் காணாமல் போன நால்வரை பற்றி நீ துளியாவது கவலைப்பட்டாயா... உன்னுடன் பேசுவது போல, நால்வரின் குடும்பத்தாருடனும் பேசி ஆறுதல் படுத்தி கொண்டிருக்கிறேன். ஐந்து குடும்பத்தாருக்கும் இடையே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை பற்றி துளி கவலைப்பட்டாயா...''

''நான் தந்தையின் மீது உயிரை வைத்திருக்கும் குட்டி ஆத்மா. என் தந்தையின் பாதுகாப்பு மட்டுமே முக்கியம்...''

''பிறரின் துக்கங்களையும், உன் துக்கமாக பாவித்து பழகு! அதற்கு பரமாத்மாவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண மனுஷியாக இருந்தால் போதும்...''

''அடுத்த, ஆறு மணி நேரத்திலாவது, எனக்கு நல்ல செய்தி சொல்வீர்களா...''

''நல்ல செய்தி கிடைத்தால், அடுத்த நொடியில் தொடர்புக்கு வருவேன். உனக்கு என் பேத்தி வயதிருக்கும்...

''நான் ஓய்வு பெறப்போகும் வயதில் இருக்கும் அதிகாரி. உன் தந்தையும், நான்கு சகாக்களும் உயிருடன் மீட்கப்பட இறை அருள் புரியட்டும்...''

''நன்றி அதிகாரி தாத்தா...''

தொடர்ந்து திடுக்கிடும் திருப்பங்கள் அரங்கேறும் என்பதை அவர்கள் சிறிதும் அறிந்தாரில்லை!



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா






      Our Apps Available On




      Dinamalar

      Follow us