Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முழுமை பேண்!

முழுமை பேண்!

முழுமை பேண்!

முழுமை பேண்!

PUBLISHED ON : ஏப் 26, 2025


Google News
Latest Tamil News
மதுரை மாவட்டம், வலச்சிகுளம் ஸ்ரீமந்தை சுவாமி அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், 1982ல், 5ம் வகுப்பு படித்தேன். எளிய நடைமுறைகளை பின்பற்றி பாடங்களை கற்றுக் கொடுத்தனர் ஆசிரியர்கள். மதிய உணவு இடைவேளை, 10 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள நேரத்தில், கணித வாய்ப்பாடு, குறட்பாக்களை மனப்பயிற்சி செய்ய வேண்டும். இது, வலுவான அடித்தளம் அமைத்தது.

தலைமையாசிரியை மாணிக்க கிருஷ்ணாமணி, கணித பாடத்தை எளிய விளக்கங்களுடன் நடத்துவார். அரையாண்டு தேர்வில் திருத்திய விடைத்தாள் வினியோகித்த போது, 'ஆர்.மாலதி...' என விழித்தார். ஆர்வமுடன் அருகில் சென்றேன்; மதிப்பெண் குறைந்திருப்பதாக அடித்து தண்டித்தார்.

பின்னர், பெயரில் குழப்பத்தை விசாரித்து, தவறென புரிந்து அது மற்றொரு மாணவிக்குரியது என்பதை உறுதி செய்து வருந்தினார்.

என் விடைத்தாளை தேடி கண்டறிந்து, 'நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்...' என பாராட்டினார். அத்துடன், 'எப்போதும் முழுமையாக பெயரை குறிப்பிட தவறக்கூடாது...' என அறிவுரைத்தார் தலைமையாசிரியை. தவறை உணர்ந்து திருந்தினேன்.

எனக்கு, 51 வயதாகிறது; ஸ்ரீரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வராக பொறுப்பு வகிக்கிறேன். மேல்நிலை விலங்கியல் ஆசிரியராகவும் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் 1,400 பேரின் செய்முறை நோட்டுகளில் பச்சை மையால் கையெழுத்திடுவது அவசியமாகிறது. அப்போது, சுருக்க ஒப்பமளிக்க பரிந்துரைப்பர் சக ஆசிரியர்கள்.

அவர்களிடம், என் துவக்கப் பள்ளி தலைமையாசிரியை தந்த அறிவுரையை நினைவு கூர்ந்து, முழுப் பெயர் எழுதி ஒப்பமிடுவதை வழக்கமாக்கியுள்ளேன்.

கற்பிப்பதில் நல்லாசிரியர் விருது உட்பட கவுரவங்கள் பெற்றுள்ளேன். இதுபோல் சிறக்க துாண்டுதலாக அமைந்த தலைமையாசிரியை மாணிக்க கிருஷ்ணாமணியை போற்றி வாழ்கிறேன்.

- ஆர்.மருதமாலதி, தேனி.

தொடர்புக்கு: 63813 40019






      Our Apps Available On




      Dinamalar

      Follow us