Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/ஒற்றை செல்லிலிருந்து மூளை உருவாவது எப்படி?

ஒற்றை செல்லிலிருந்து மூளை உருவாவது எப்படி?

ஒற்றை செல்லிலிருந்து மூளை உருவாவது எப்படி?

ஒற்றை செல்லிலிருந்து மூளை உருவாவது எப்படி?

PUBLISHED ON : மார் 12, 2026 07:51 AM


Google News
Latest Tamil News
இயற்கையின் ஆகச் சிறந்த படைப்பான மூளை, எளிய ஒற்றை செல்லிலிருந்து துவங்குகிறது. அதிலிருந்து கிளைத்து உருவாகும் பல கோடிக்கணக்கான நியூரான்கள், ஓர் அடர்ந்த வனம் போன்ற சிக்கலான வலைப்பின்னலை உருவாக்குகின்றன. இந்த அடர்ந்த காட்டில் பலவகை செல்கள் கிளைத்தெழுகின்றன. இதில், எந்த வகை செல்கள் எங்கு செல்ல வேண்டும், அவை என்னவாக மாற வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்கின்றன என்பது புதிராகவே இருந்தது.

மூளை செல்களிலுள்ள வேதியியல் சமிக்ஞைகள்தான், ஒரு வழிகாட்டி வரைபடம் போலச் செயல்பட்டுச் செல்களை வழிநடத்துவதாக இதுவரை விஞ்ஞானிகள் கருதினர்.

ஆனால், ஹார்வர்டு பல்கலை விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு ஒரு மாற்று வழிமுறையை முன்வைக்கிறது.

செல்கள், 'மூதாதையர் நினைவாற்றலை' சுமந்து வருகின்றன. ஒரு செல், பலவாகப் பிரியும்போது, பிரிந்த வாரிசு செல்கள் தாங்கள் எந்தக் 'குடும்ப விருட்ச'த்திலிருந்து வந்தோம் என்ற தகவலை மரபுவழியாகப் பெறுகின்றன. இந்த செல் வம்சாவளி வரலாறுதான், வளரும் மூளையில் அந்தச் செல்கள் எங்கு சென்று சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

எலிகள் மற்றும் மீன்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் கணித மாதிரிகளின் உதவியுடன், செல்களின் இந்த 'பிரிவினை வரலாறு' மூளையின் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, மூளையின் பிரமாண்டமான கட்டமைப்பு என்பது வெறும் வேதியியல் கட்டளைகளால் மட்டும் உருவாவதல்ல. அது செல்கள் தங்களுக்குள் குறித்து வைத்திருக்கும் ஒரு நுட்பமான குடும்ப விருட்சத் தகவல்களாலும் வழிநடத்தப்படுகின்றன. மிகமிகச் சிக்கலான மனித மூளையின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பின்னால், மிக எளிய விதிகளே இருக்கலாம் என, ஹார்வர்டு விஞ்ஞானிகள், 'நேச்சர் நியூரோசயின்ஸ்' இதழில் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us