PUBLISHED ON : மே 07, 2026 07:49 AM

சூரிய மண்டலத்தின் மிக அபாயகரமான பகுதி சூரியனோ அல்லது வியாழனின் நிலவுகளோ அல்ல; அது பூமிக்குச் சற்று மேலே உள்ள விண்வெளிப் பகுதிதான் என்கிறார் டாக்டர் ஜரோஸ்லாவ் பௌப்ளிக். 'ரிப்ராக்டர்' இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், மனித நடவடிக்கைகளும் அண்ட வெளிக் காரணிகளும், புவியின் தாழ்வான சுற்றுப்பாதையை ஆபத்து அதிகமுள்ள மண்டலமாக மாற்றிவிட்டது என்கிறார்.
அன்றாட ஜி.பி.எஸ், தொலைத்தொடர்பு மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்குத் தேவையான செயற்கைக்கோள்கள் வலம் வருவது இப்பகுதியில் தான். ஆனால் , அதே பகுதியில்தான் லட்சக் கணக்கான விண்வெளிக் குப்பைகள் மணிக்கு 28,000 கி.மீ., வேகத்தில் சுற்றிக் கொண்டிருக் கின்றன. ஒரு சிறிய துண்டு மோதினாலும், விண்கலங்கள் சிதறக்கூடும். இது மேலும் பல குப்பைகளை உருவாக்கி, எதிர்காலத்தில் ஒரு சங்கிலித் தொடர் விபத்திற்கு வழிவகுக்கும் என்கிறார் அவர்.
இதோடு, திடீரென தாக்கும் சூரியப் புயல்கள், நமது செயற்கைக்கோள்களையும் மின்சாரக் கட்டமைப்புகளையும் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.அதேபோல, விண்கற்கள் மோதும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மிக அதிகம்.
எனவே, நமக்கு மிகக்கடுமையான சூழலை விட, ஒரு பாதுகாப்பற்ற சுற்றுப்பாதையைச் சார்ந்து நாம் வாழத் தொடங்கியிருப்பதே இங்குள்ள மிகப்பெரிய ஆபத்து என பௌப்ளிக் எச்சரிக்கிறார்.





