Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கந்துவட்டி நபரை 'காபந்து' செய்யும் 'மாஜி' மந்திரி!

கந்துவட்டி நபரை 'காபந்து' செய்யும் 'மாஜி' மந்திரி!

கந்துவட்டி நபரை 'காபந்து' செய்யும் 'மாஜி' மந்திரி!

கந்துவட்டி நபரை 'காபந்து' செய்யும் 'மாஜி' மந்திரி!

PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
''நாம தான் கெடந்து அடிச்சுக்கறோம்னு புலம்பறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.

''திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய புள்ளி, அ.தி.மு.க., ஆட்சி காலத்துலயே, கோவை முக்கிய புள்ளியுடன் சமுதாய ரீதியா நெருங்கிய நட்புல இருந்தார்... ஆட்சி மாறியதும், அவா நட்பு இன்னும் பலமாயிடுத்து ஓய்...

''சமீபத்துல கோவையில், அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மடத்துக்குளம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரன் இல்ல திருமண விழா நடந்துது... இதுக்கு, திண்டுக்கல் முக்கிய புள்ளி சத்தமே காட்டாம வந்துட்டு போயிருக்கார் ஓய்...

''இதை பார்த்த அ.தி.மு.க., தொண்டர்கள் வாயடைச்சு போயிருக்கா... 'நம்ம கட்சியின் கோட்டையான பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., ஜெயிச்ச ரகசியம் இப்பதானே தெரியுது'ன்னு தங்களுக்குள்ள பேசிக்கிட்டா ஓய்...

''அதுவும் இல்லாம, 'கொங்கு மண்டலத்துல, சமுதாய ரீதியில் ரெண்டு கட்சி புள்ளிகளும் ஒண்ணாயிடறா... நாம தான் தலைவன், கொள்கைன்னு சண்டை போட்டு, மண்டையை உடைச்சுக்கறோம்'னு ரெண்டு கட்சி தொண்டர்களுமே புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அதிகாரி மேல அதிரடி புகார் குடுத்துட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 8.80 லட்சத்துல தானிய உலர் களம், 11.67 லட்சத்துல தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க டெண்டர் விட்டாங்க... இதை, மாவட்ட தி.மு.க., நிர்வாகி எடுத்துட்டாருங்க...

''ஊராட்சி தலைவரான அஞ்சலம், இந்த கான்ட்ராக்டை எதிர்பார்த்து, கிடைக்காம விரக்தியாகிட்டாங்க... இதனால, அவங்க தரப்பு, 'உலர் களம் அமைச்சா சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்'னு எதிர்ப்பு தெரிவிச்சாங்க... இன்னொரு தரப்பு, 'கண்டிப்பா உலர் களம் அமைச்சே ஆகணும்'னு மல்லுக்கு நின்னதுங்க...

''இது சம்பந்தமா அஞ்சலத்தை, திட்ட இயக்குனர் லலிதா, தன் அலுவலகத்துக்கு அழைச்சு விளக்கம் கேட்டிருக்காங்க... அப்ப, திட்ட இயக்குனர், தன் ஜாதியை சொல்லி திட்டி, மிரட்டியதா டி.எஸ்.பி.,யிடம் அஞ்சலம் புகார் குடுத்துட்டாங்க... விசாரணை நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கந்துவட்டி நபரை காப்பாத்துதாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருவள்ளூர் மாவட்டம், கண்ணபாளையம் பகுதி தி.மு.க., நிர்வாகி ஜோதி, அதே பகுதியை சேர்ந்த கந்து வட்டிக்காரரிடம் கடன் வாங்கியிருந்தாரு... இதுக்கு ஈடா அவர் குடுத்திருந்த நில பத்திரங்களை, போலி ஆவணங்கள் வாயிலா கந்துவட்டி நபர் வித்துட்டாரு வே...

''இதனால, தன் கடனை கழிச்சிட்டு மீத பணத்தை தாங்கன்னு ஜோதி கேட்டதுக்கு, கந்துவட்டி நபர் கொலை மிரட்டல் விடுத்திருக்காரு... ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல ஜோதி புகார் குடுத்தும் பலன் இல்ல வே...

''கந்துவட்டி நபரும் அந்த பகுதி ஆளுங்கட்சி, 'மாஜி' அமைச்சரும் நெருக்கம் என்பதால், 'மாஜி'யிடமே போய் ஜோதி முறையிட்டிருக்காரு... அவரோ, கந்து வட்டிக்காரருக்கு ஆதரவா பேசி, ஜோதியை அனுப்பிட்டாரு வே...

''இதனால, முதல்வரின் தனிப்பிரிவுல ஜோதி புகார் குடுத்திருக்காரு... இங்கயும் நடவடிக்கை எடுக்கலன்னா அறிவாலயம் போய் முதல்வரை பார்த்து முறையிட முடிவு பண்ணியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us