/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பெண்கள் உறுதியுடன் உழைக்க வேண்டும்!

 பெண்கள் உறுதியுடன் உழைக்க வேண்டும்!

 பெண்கள் உறுதியுடன் உழைக்க வேண்டும்!

 பெண்கள் உறுதியுடன் உழைக்க வேண்டும்!

 பெண்கள் உறுதியுடன் உழைக்க வேண்டும்!

PUBLISHED ON : ஏப் 02, 2026 04:07 AM


Google News
Latest Tamil News
இயற்கை முறையில் ஐஸ்கிரீம் தயாரித்து, விற்பனை செய்து வரும் கோவையைச் சேர்ந்த, 44 வயதான லதா:

என், சொந்த ஊர் கோவை. பி.எஸ்சி., படித்தபோதே, காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இரு வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மூன்று ஹோட்டல்களில், 11 ஆண்டுகள் வரவேற்பாளராக வேலை பார்த்தேன்.

கணவர், பயண முகவராக இருந்தார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, வேலையை விட நேர்ந்தது. வீட்டில் ஏதாவது புதிது புதிதாக சமைத்து பார்ப்பேன்.

பழங்கள் மற்றும் சிறுதானியங்களில் ஐஸ்கிரீம் செய்து பார்த்தேன். சாப்பிட்டு பார்த்த அனைவருமே பாராட்டினர். இதனால், 'புரூட் ஐஸ்கிரீம்' என்ற பெயரில் கடை திறந்தேன்.

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சி எடுத்தேன். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை, வாடிக்கையாளர்களுக்கு தரமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளிலும் ஐஸ்கிரீம் தயாரித்தேன். இயற்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பொருட்களை வாங்கிக் கொள்வேன்.

ஐஸ்கிரீம் விற்பனையில் கிடைத்த வருமானம், கணவர் சிகிச்சைக்கும், குடும்பம் நடத்தவுமே சரியாக இருந்தது. 2022ல் கணவர் திடீரென இறந்து விட்டார். இறுதி காரியங்கள் செய்யவே, கையில் காசு இல்லை; நண்பர்கள், தொழில் வட்டாரத்தில் இருந்து தான் உதவி செய்தனர்.

வங்கி கடன் கட்ட முடியாததால், வங்கி மேலாளர், அனைவர் முன்பும் திட்டி அவமானப்படுத் தினார். ஏன் வாழ வேண்டும் என்ற அளவுக்கு காயப் படுத்தினார். ஆனாலும், எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற வேட்கை அதிகமானது.

கடந்த 2023ல், கோவையில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்தேன். தமிழகம் முழுக்க எங்கு கண்காட்சி நடந்தாலும், ஐஸ்கிரீம் கடை போட்டு விடுவேன். நிறைய வரவேற்பு கிடைத்தது. கேட்டரிங் படித்து விட்டு, என் மகனும் இப்போது எனக்கு வி யாபாரத்தில் உதவி செய்து வருகிறார்.

தற்போது, 250 வகையான ஐஸ்கிரீம்களை தயாரிக்கிறோம். தேனி, சங்கரன்கோவில், சென்னை ஆகிய ஊர்களில் கிளைகள் திறந்திருக்கிறோம்.

துளசி, வரகு, வெற்றிலை, பஞ்சாமிர்தம், மிளகு, இஞ்சி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருப்பட்டி, நாட்டு சர்க்கரை என பல தனித்துவமான ஐஸ்கிரீம்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இப்போது சராசரியாக மாதத்திற்கு, 1,000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கிறோம். மாதம், 3 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமும், 60,000 ரூபாய்க்கு லாபமும் கிடைத்து வருகிறது. பெண்கள் ஒரு முடிவை உறுதியாக எடுத்து உழைத்தால், அதில் வெற்றி நிச்சயம்.

தொடர்புக்கு:

70107 40664