PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

கைவினை பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், சென்னை பெருங்குடியை சேர்ந்த, 37 வயதான சவும்யா வரதன்: கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, கைவினை பொருட்கள் தயாரிப்பில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளேன். 'யார்ன் வொண்டர்ஸ்' என்ற பெயரில், 'குரோஷே' தையல் பின்னல் முறையில் பருத்தி நுால்களால் கைவினை பொருட்களை தயாரிக்கிறேன்.
மேலும், அது குறித்த பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன்.
அந்த காலத்தில், வீட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தில், இதுபோன்ற ஏதாவது ஒரு கைவினை பொருள் தயாரிப்பில் ஈடுபட்டனர். ஆனால், அடுத்த தலைமுறையினர் இதில் அதிக ஆர்வம் காட்டாததால், அந்த கலையை யாரும் செய்ய விரும்பவில்லை.
தற்போது, மீண்டும் கைவினை பொருட்களுக்கான தேடல் அதிகரிக்கிறது. அவற்றை வாங்கவும் தயாரிக்க கற்றுக்கொள்ளவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டுகின்றனர்.
பொம்மைகள், கைப்பை, பர்ஸ், கீ செயின், ஆடைகள், அலங்கார பொருட்கள் என பொருட்களை உருவாக்க முடியும். அதற்கான சிறப்பு வகுப்புகளை, சமூக வலைதளம் வாயிலாகவும் கற்றுக் கொள்ளலாம். அதில், எந்த கைவினை பொருளுக்கு விற்பனை அதிகம், மூலப்பொருட்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் கற்றுக் கொடுப்பர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் மூலப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அங்கு அடிக்கடி பொருட்கள் வாங்கும்போது, விலையை சற்று குறைத்து கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
முதலில், சில நுாறு ரூபாய் செலவிலேயே கைவினை பொருட்களை தயாரிக்க வேண்டும்.
அதன்பின், சமூக வலைதளங்கள் வாயிலாக தயாரிப்புகளை விளம்பரம் செய்யலாம். விற்பனை, பயிற்சி வகுப்பு என இரண்டிலும் கவனம் செலுத்த விரும்பினால், இரண்டுக்கும் தனித்தனி சமூக வலைதளம் பயன்படுத்துவது நல்லது. அந்த தளத்துக்கு ஏற்றாற்போல், காணொளிகளை தயாரித்து வெளியிட வேண்டும்.
மொத்த உற்பத்தி என்ற வகையில், கைவினை பொருட்களை தயாரிக்க முடியாது.
இவை அதிக பொறுமையுடன், நீண்ட நேரம் செலவழித்து, நம் கைகளாலேயே தனித்து உருவாக்கப்படுபவை; எனவே, இவற்றுக்கான விலை நிர்ணயம் செய்வதிலும் கவனம் தேவை.
உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் தான் உங்களுடைய ஆரம்பக்கட்ட வாடிக்கையாளர்கள்; சமூக வலைதளங்கள் வாயிலாக, ஏற்றுமதி வாய்ப்புகளையும் ஏற்படுத்த முடியும்.
தொடர்புக்கு
90420 56421
