PUBLISHED ON : ஏப் 14, 2026 01:40 AM

பாரம்பரிய விதைகளை சேர்த்து வைத்து, கேட்பவர்களுக்கு இலவசமாக வழங்குவது, மாடித் தோட்டம் குறித்து வகுப்பெடுப்பது என பன்முகம் கொண்ட, திருப்பூரைச் சேர்ந்த, 46 வயதான, ப்ரியா:
திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள, எங்கள் வீட்டைச் சுற்றி, பெரிதாக இடம் எதுவும் கிடையாது. ஆனால், என்னை விவசாயத்திற்குள் இழுத்தது, ஒரு சின்ன செடி தான்.
சாலை ஓரத்தில் சீந்துவாரின்றி, அழகாக பூத்து வளர்ந்து கிடந்த ஒரு பூசணி செடியை எடுத்து வந்து, என் வீட்டை ஒட்டி உள்ள ஒரு சின்ன இடத்தில் நட்டு வைத்தேன். அப்போது தண்ணீர் தெளித்ததோடு சரி... பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால், அச்செடி கொடுத்த பூசணிக்காய் விளைச்சல், என்னை ஆச்சரியப்படுத்தியது.
நாம் ஏன் சிறிதாக விவசாயம் செய்யக்கூடாது என்று நினைத்து, அந்த சிறு இடத்தை விளைநிலமாக மாற்றினேன். மண் வளமாக இருந்ததால், விதைத்தது, நட்டது என, எல்லாமே சிறப்பாக விளைந்தது.
அதன்பின், என் விவசாய நிலத்தை அதிகப்படுத்தினேன். தக்காளி, வெண்டை என வளர்த்து வந்த நான், இப்போது டிராகன் பழம், செர்ரி பழம் வளர்க்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். துளிக் கூட ரசாயனம் இல்லாமல், இயற்கை விவசாயம் தான் செய்கிறேன்.
அதையெல்லாம் தாண்டி, பாரம்பரிய விதைகளை பாதுகாத்து பலருக்கும் கொடுக்கிறேன். வீட்டிலேயே விவசாயம் செய்வது எப்படி என, வகுப்புகளும் எடுத்து வருகிறேன்.
இயற்கை வழியில் விவசாயம் செய்து, விற்பனைக்கு வரும் விளை பொருட்கள், சாதாரண விலையில் கிடைப்பதில்லை. அப்படி எனில் நாம், நஞ்சு கலந்த உணவை தான் சாப்பிட வேண்டுமா?
இந்த விவகாரத்திற்கான மிகப்பெரிய தீர்வை, தனியொருத்தராக நாம் ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொள்ளலாம். அதுவும் நம் வீட்டிலேயே, மிக மிக குறைவான செலவில்; அதுதான், மாடித்தோட்டம்.
நஞ்சில்லாத காய்கறிகளை விளைவித்து சாப்பிடுவதன் வாயிலாக, நம் குடும்பத்தை நோய் அண்ட விடாமல் தடுக்கலாம் தானே!
நமக்கு தேவைப்படும் காய்கறிகளை ரசாயனம் இல்லாமல், நம் வீட்டிலேயே வளர்த்தோம் எனில், உயிருக்கும் நல்லது; ரூபாயும் மிச்சப்படும்.
முதலில் நாம் விதைக்கும் மண், ஓரளவாவது வளமாக இருக்க வேண்டும். ஒரே மண்ணை பயன்படுத்தாமல், செம்மண், ஆற்று மண், அதில் கொஞ்சம் மண் புழு உரம், காய்ந்த மாட்டுச் சாணம் போட்டு மண்ணை தயார் செய்து, அதன்பின் விதைப்பது நல்லது.
வெறுமனே தண்ணீர் மட்டுமே கொடுத்து விட்டால், செடி காய்த்து தள்ளிவிடாது; சத்துக்கள் தர வேண்டியது அவசியம். பல நுாறு ரூபாய் செலவழித்து, ரசாயன மருந்து வாங்கி ஊற்றுவதற்கு பதில், இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்துங்கள்.
தொடர்புக்கு: 99430 76601.





