PUBLISHED ON : ஜன 06, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
பிரதமர்
மோடி என்ற ஒற்றை புள்ளியில் பா.ம.க., - தே.மு.தி.க., - அ.ம.மு.க., -
த.மா.கா., - ஐ.ஜே.கே., - புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, சமத்துவ மக்கள்
கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவோம். தமிழகத்தில் அரசியல்
புரட்சி நிகழ்த்த, ஜெயலலிதாவிடம் பெற்ற அரசியல் ஞானம் கொண்ட
பன்னீர்செல்வத்தின் முதிர்ச்சியும், அண்ணாமலை, அன்புமணி, தினகரன்
போன்றவர்களின் சுறுசுறுப்பும் கை கொடுக்கும்.
மக்கள் நலக்கூட்டணி
மாதிரி புதுசா ஏதோ சொல்றாரு... அந்த கூட்டணிக்கு அப்புறம் தே.மு.தி.க.,
ஒண்ணுமில்லாம ஆன மாதிரி, பா.ஜ.,வையும் ஆக்கிடாம இருந்தால் சரி!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 9ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவித்து உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன் போராட்டம் நடத்தினால் கடும் பாதிப்புகள் ஏற்படும். தொழிலாளர் கோரிக்கைகள் நியாயமானவை. அதை நிறைவேற்றி, போராட்டத்தை அரசு தவிர்க்க வேண்டும்.
'ஸ்டியரிங் பிடிக்க தெரிந்தால் போதும்; அரசு பஸ்சை ஓட்டலாம்'னு தற்காலிக ஓட்டுனர்களை பணியமர்த்தி, பொங்கலுக்கு பஸ்களை ஓட்டுவாங்க பாருங்க!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: நானும், பன்னீர்செல்வமும் ஆறு மாதங்களுக்கு முன்பே, இணைந்து பணியாற்றுவோம் என, முடிவெடுத்தோம். பழனிசாமி உடன் சேர்ந்ததை தவறு என உணர்ந்து தான், பன்னீர்செல்வம் அங்கிருந்து வெளியேறி, ஜெயலலிதாவின் தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எங்களோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
இப்ப, பழனிசாமியுடன் சேர்ந்தது தவறுன்னு உணர்ந்த மாதிரி, எதிர் காலத்துல, இவரோட சேர்ந்ததும் தவறுன்னு அவர் உணராமல் இருந்தால் சரி!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி, கரும்பு, சர்க்கரை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது; இது, மக்களை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தொகுப்பில், அறிவிக்கப்படாமல் உள்ள பரிசுத் தொகை சேர்த்து, முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெல்லம் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும்.
விட்டா, மணல், மணலாய், 100 கிராம் நெய்யும் சேர்த்து கொடுக்க சொல்லுவாங்க போலிருக்கே!