PUBLISHED ON : ஜூன் 26, 2024 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: கள்ளக்குறிச்சி
கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை.
உயிரிழந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்கும் தமிழக அரசு போதிய
உதவிகளை செய்து வருகிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சி.பி.ஐ., விசாரணை
வேண்டும் என கேட்பது மலிவான அரசியல்.
திருச்சியில் தீப்பெட்டி
சின்னத்தில் நின்ற இவரை திக்குமுக்காட வைக்காம வெற்றி பெற வச்சவங்களுக்கு
இவ்வளவு கூட விஸ்வாசமா இல்லைனா எப்படி?
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து அறிக்கை: கடந்த காலங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் இருந்த தென்னை விவசாயம் இன்று பரவலாக நடந்து வருகிறது. கள் இறக்குவதை முறைப்படுத்தி, விற்பனையை ஒழுங்குபடுத்தினால் இதுபோன்ற அவலங்கள் நடக்காது. இதற்கு, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலில் மாற வேண்டும். கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்டவற்றை ஒழிக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.
மது தயாரிப்பு தொழிற்சாலை நடத்துறவங்களும், மாமூலில் கொழிப்பவர்களும் கள் இறக்கி விற்க எப்படி கரிசனம் காட்டுவாங்க?
அகில இந்திய ஹிந்து மகா சபா மாநில தலைவர் ஸ்ரீஜி பேட்டி: தமிழகத்திலுள்ள கோவில்களில் முதியவர்கள், பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. பக்தர்கள் லட்சக்கணக்கில் நன்கொடை வழங்குகின்றனர். அதை கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் வேறு விஷயங்களுக்கு பயன் படுத்துகின்றனர். தி.மு.க.,வை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த ஹிந்துக்களுக்கு எதிராக அரசு செயல்பட்டால், 2026 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக மாற்றம் வரும்.
இந்த தேர்தலில் கொஞ்சமாவது ஆளுங்கட்சிக்கு பயம்காட்டியிருந்தா அடக்கி வாசிச்சிருப்பாங்க... வெற்றியை அள்ளிக் கொடுத்தா இன்னும் ஆடத்தானே செய்வாங்க!
தமிழக காங்கிரஸ் எஸ்.சி., அணி மாநில தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை: பள்ளிகளில் ஜாதி, மத பாகுபாடுகளை களையும் வகையில், நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்திருக்கிறது. இந்த பரிந்துரைகள் கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிரானது என்கின்றனர். நீதிபதி அறிக்கையில் நிறை, குறைகள் இருக்கலாம். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை திருத்த வேண்டும். அரசே அந்த அறிக்கையை முழுமையாக செயல்படுத்தாது. இந்த சூழலில் அதை நிராகரிக்க வேண்டும் என கூக்குரலிடுவது வேடிக்கை.
இவர் சொல்ற இந்த கருத்தை ஆட்சியாளர்கள் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?