PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, சிக்கலில் தேவேந்திரகுல வேளாளர் சங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவில், அ.தி.மு.க., சார்பில் முதுகுளத்துார் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போது அ.தி.மு.க.,வில் உள்ளவருமான மலேஷியா பாண்டியன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'பழனிசாமி என்னை இந்த தொகுதியில் நிற்க சொல்லி உள்ளார். மீண்டும் மீண்டும் சேவையாற்ற வருவேன். ஏனென்றால், நான் எல்லா செல்வங்களையும் பெற்று விட்டேன். கமிஷனாக எந்த ஒரு விஷயத்தையும் பெற அவசியம் இல்லை. எனக்கு ஆதரவளிக்க வேண்டும். உங்களுக்காக பாடுபடுவேன்; எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. என்னை தேர்ந்தெடுங்கள்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'கட்சியில் இருந்து வேட்பாளரை அறிவிக்கும் முன், இவரே, 'நான் தான் வேட்பாளர்'னு அறிவிச்சிட்டாரே... இவரை மாதிரியே எல்லாரும் கிளம்பிட்டா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு சிக்கல் தான்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.