PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும் வகையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், தேசியக்கொடி ஊர்வலத்துக்கு பா.ஜ., ஏற்பாடு செய்திருந்தது.
பா.ஜ., நிர்வாகிகள் ராஜபிரதீப், சிலம்பரசன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, 'மெயின் பஜாருக்குள் ஊர்வலம் வரக்கூடாது' என, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பா.ஜ.,வினரை மெயின் பஜாருக்குள் வரவிடாமல், பேரூராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதித்தனர்.
'இளையான்குடியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகம் வசிப்பதால், அவர்களை திருப்திப்படுத்த போலீசார் இவ்வாறு செயல்படுகின்றனர்' என, புலம்பியபடியே பா.ஜ.,வினர் நடந்தனர்.
அப்போது ஒரு தொண்டர், 'விடுங்கப்பா, அடுத்த வருஷம் பழனிசாமி ஆட்சி வந்ததும், உரிமையுடன் மெயின் பஜாரில் ஊர்வலம் போவோம்...' எனக் கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே நடந்தனர்.