PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

செப்டம்பர் 21, 1901
சிவகங்கை மாவட்டம், ஆவணிப்பட்டியில், பெரியண்ணன் செட்டியார் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1901ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பிரமணியம் செட்டியார்.
இவர், பல்வேறு இதழ்களில் புதினம், கட்டுரைகளை எழுதினார். வெளிநாடுகளில் மக்களின் வாழ்க்கையை ஆராயும் ஆவலில், இலங்கைக்கு சென்றார். அங்கு, தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் தோட்ட தொழிலாளர்களாக இருந்ததை அறிந்தார். அவர்களை மேம்படுத்த, 1930, ஆகஸ்ட் 6ல், இலங்கையிலேயே, 'வீரகேசரி' என்ற தமிழ் பத்திரிகையை துவங்கினார்.
அதன் முதன்மை ஆசிரியராக, 20 ஆண்டுகள் செயல்பட்டார். அது, தமிழர்களிடம் அரசியல், சமூக விழிப்புணர்வை ஊட்டியது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின், பத்திரிகை நிறுவனத்தை விற்றுவிட்டு, தாயகம் திரும்பினார்.
எஸ்.வி.எஸ்.பி., என்ற பெயரில் வணிகம் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களை துவக்கினார். அதை, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் விரிவாக்கி, ரப்பர், காபி தோட்டங்களை வாங்கி நிர்வகித்தார்.
தமிழகத்தின் அழகாபுரியில், கேசரி பிரதர்ஸ் அண்ட் கோ என்ற நிறுவனத்தையும், அச்சகத்தையும் நிறுவினார். இவர் தன், 73வது வயதில், 1975, ஜனவரி 23ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!