/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 'பைக்' டாக்சியில் பார்சலாக பயணிக்கும் பெங்களூரு மக்கள் 'பைக்' டாக்சியில் பார்சலாக பயணிக்கும் பெங்களூரு மக்கள்
'பைக்' டாக்சியில் பார்சலாக பயணிக்கும் பெங்களூரு மக்கள்
'பைக்' டாக்சியில் பார்சலாக பயணிக்கும் பெங்களூரு மக்கள்
'பைக்' டாக்சியில் பார்சலாக பயணிக்கும் பெங்களூரு மக்கள்

பெங்களூரு: கர்நாடகாவில், 'பைக் டாக்சி' சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள், 'பைக் பார்சல்' என்ற பெயரில் வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், 'ஓலா, ஊபர், ராபிடோ' போன்ற நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையில் ஈடுபட்டு வந்தன. சமீபத்தில், இந்த சேவைக்கு மாநில அரசு தடை விதித்தது.
போக்குவரத்து நெரிசல் நிரந்தர பிரச்னையாக உள்ள பெங்களூரில், பைக் டாக்சி சேவை பயனுள்ளதாக இருந்த நிலையில், அதற்கு மாநில அரசு தடை விதித்தது, பேசு பொருளானது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதன்படி, ஜூன் 16 முதல் கர்நாடகாவில் பைக் டாக்சி தடை அமலுக்கு வந்தது.
ஆனாலும், பெங்களூரு மக்கள் இந்த சேவையை விடுவதாக இல்லை. ராபிடோ, ஊபர் போன்ற நிறுவனங்கள், 'பைக் பார்சல்' என்ற சேவையை ஏற்கனவே வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்கள் வழங்கும் பொருட்களை, 'டெலிவரி' செய்யும் சேவையை செய்கின்றன.
இந்த பார்சல் சேவையை தங்கள் பயணத்துக்கு பெங்களூருவாசிகள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதன்படி, பைக் பார்சல் சேவையை புக் செய்யும் வாடிக்கையாளர்கள், அந்த பைக்கில் ஏறி செல்ல வேண்டிய இடத்துக்கு பயணிக்கின்றனர். இதை அந்நிறுவனங்களும் தடுக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன், 'கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 'பைக் பார்சல்' என்ற பெயரில், பைக் டாக்சி சேவையை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
'இதை தடுக்க காங்., அரசு தவறி விட்டது. இது நீதிமன்ற அவமதிப்பு' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த ஒருவர், 'பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.மீட்டர்கள் வெறும் காட்சிக்கு மட்டுமே உள்ளன. பைக் டாக்சி சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது' என, குறிப்பிட்டார்.