PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்து உள்ளன. காரைக்குடியில், பிரதான சாலையில் ஊருக்கு நடுவில் நடந்த கொலை, மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே போகின்றன. முதல்வரும், காவல் துறை தலைவரும் இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அப்படி என்றால், காரைக்குடியில், ஊருக்கு வெளியில முட்டுச்சந்துல கொலை நடந்தா மட்டும் வருத்தப்பட மாட்டீங்களா...? கூட்டணி கட்சி என்பதால் கண்டனம் தெரிவிக்க முடியாம, வருத்தம் தெரிவிச்சுட்டு கடந்து போறீங்க என்பது மட்டும், 'டவுட்' இல்லாம தெரியுது!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இலங்கையில், தமிழக மீனவர்களை சங்கிலியில் பிணைத்து அழைத்து செல்வது வேதனையாக உள்ளது. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தவரை, தமிழக மீனவர்களுக்கு கடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. இலங்கை அரசு அஞ்சி கொண்டிருந்தது. அப்படியொரு நிலை மீண்டும் வர வேண்டும் என்றால், இன்னொரு பிரபாகரனாக இருக்கும் நான், தமிழக முதல்வர் ஆக வேண்டும்.
டவுட் தனபாலு: பிரபாகரனை, 10 நிமிஷம் மட்டுமே நீங்க பார்த்து பேசியதாக, உங்க அரசியல் எதிரிகள் சொல்றாங்க... அதுக்கே, இன்னொரு பிரபாகரன்னு தம்பட்டம் அடிச்சுக்குறீங்களே... அப்படி என்றால், பிரபாகரனுடன் 24 நாட்கள் தங்கிய வைகோ, பிரதமர் ஆகணும்னு சொல்லுவாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி: கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், '400 தொகுதிக்கு மேல் கைப்பற்றி லோக்சபாவில் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும்' என, கொக்கரித்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து, 'இண்டியா' கூட்டணி அமைத்ததன் வாயிலாகவே, பா.ஜ., மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டியதானது.
டவுட் தனபாலு: 'இண்டியா' கூட்டணியை துவக்கி, ஒருங்கிணைத்தது, இப்ப அந்த கூட்டணியில் இல்லாத பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தான்... அதுல சேர்ந்த பல கட்சிகள்ல தி.மு.க.,வும் ஒன்று... ஆனா, கூட்டணியை உருவாக்கியதே ஸ்டாலின் தான்னு அடிச்சு விடுறீங்களே... வரலாற்றை திரிப்பதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!