Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/செய்தி எதிரொலி/ வாலாஜாபாத் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் அரசு பேருந்துகள்

வாலாஜாபாத் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் அரசு பேருந்துகள்

வாலாஜாபாத் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் அரசு பேருந்துகள்

வாலாஜாபாத் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் அரசு பேருந்துகள்

PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்:காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு அரசு நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இளையனார்வேலுார், நெய்யாடுவாக்கம், படூர், ஆனம்பாக்கம், நெற்குன்றம், அரும்புலியூர், உள்ளாவூர் மற்றும் சாலவாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நாளொன்றுக்கு மூன்று நடைகளும், சில பேருந்துகள் ஐந்து நடைகளும் இயங்குகின்றன.

இப்பேருந்துகள், வாலாஜாபாத் ராஜவீதி சாலையில் இருந்து, ரவுண்டானா வழியாக காஞ்சிபுரம் செல்கின்றன. ரவுண்டானா துவங்கி, ஒரகடம் மார்க்கம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளது.

இப்பேருந்து நிலையத்திற்குள் அப்பேருந்துகள் வராமல் நேராக காஞ்சிபுரம் இயக்கப்பட்டு வந்தது. இதனால், பேருந்து நிலையம் அருகே உள்ள சார் - பதிவாளர் அலுவலகம், பி.டி.ஒ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் போன்ற இடங்களுக்கு செல்வோர், ரவுண்டானா பகுதியில் இருந்து, பேருந்து நிலையம் வழியாக நடந்தே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனால், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, வாலாஜாபாத் ரவுண்டானா பேருந்து நிறுத்தம் வழியாக இயங்கும் அனைத்து வகை அரசு நகரப் பேருந்துகளும், வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளே சென்று வரும் வகையில் இயக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால், தற்போது அனைத்து வகை நகரப் பேருந்துகளும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளே சென்று பயணியரை ஏற்றிச் செல்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us