PUBLISHED ON : ஜூன் 02, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
குறிஞ்சி மலரின் ரகசியம்
குறிஞ்சி மலர் செடிகள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. மலைப் பகுதிகளின் தான் வளரும். தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வளர்கின்றன. 200 வகை உள்ளன. குறிஞ்சி மலர்கள் பூக்கும் சீசனில் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும். இதில் அதன் வகையை பொறுத்து குறிஞ்சி மலர்கள் 3 மாதம், 7 ஆண்டு, 12 ஆண்டு, 17 ஆண்டுக்கு ஒருமுறை என பூக்கிறது. இதன் காரணமாக உயிர் தப்பி பிழைப்பதற்கான ஒரு வழியாகவே இவை நீண்ட காலம் கழித்து பூப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தகவல் சுரங்கம்
படிக்கிணறுகளின் ராணி
குஜராத்தின் பதான் நகரில் 'ராணி கி வாவ்' படிக்கிணறு உள்ளது. அப்பகுதியில் நிலவிய தண்ணீர் பிரச்னையை சமாளிக்கும் விதமாக இது அமைக்கப்பட்டது. 11ம் நுாற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னர் முதலாம் பீம்தேவ் நினைவாக அவரது மனைவி ராணி உதயமதி இதை நிறுவினார். இதனால் ராணியின் கிணறு என பெயரிடப்பட்டது. நீளம் 210 அடி. அகலம் 65 அடி. ஆழம் 89 அடி. புதர், மண்ணில் புதைந்த இது 1940ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு 1980ல் தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டது. 2014ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றது.