PUBLISHED ON : ஏப் 21, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
'எதற்காக எல்லாரும் என்னையே குறி வைக்கின்றனர் என தெரியவில்லையே...' என்று கவலைப்படுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார்.
நிதிஷ் குமாருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லை; ஞாபக மறதி நோயால் அவதிப்படுகிறார். இதை வைத்து, எதிர்க்கட்சியினரான, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர், அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
அவர்களுக்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பதிலடி கொடுத்தாலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தொடர்ந்து நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார்.
அவரை விமர்சிப்பவர்கள் பட்டியலில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் இப்போது இணைந்துள்ளார்.
வக்ப் சட்டத்துக்கு நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்ததை, சமீபத்தில் கடுமையாக விமர்சித்த மம்தா, 'சிலருக்கு வயதானாலும் பதவி மீதான மோகம் மட்டும் இன்னும் குறையவில்லை.
'பதவிக்காக கொள்கை, சித்தாந்தத்தை துாக்கி எறிந்து விடுகின்றனர். நிதிஷ்குமார் போன்றவர்கள், இப்படி ஒரு பதவி சுகத்தை அனுபவித்து தான் தீர வேண்டுமா...' என்றார். இதனால் கடுப்பான நிதிஷ் குமார், 'மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிப்பதால், மத்திய அரசின் சட்டத்தை ஆதரிக்கிறோம்; இதில் என்ன தவறு இருக்கிறது. என் மீது, மம்தாவுக்கு என்ன தனிப்பட்ட விரோதம்; எதற்கு இந்த ஆவேசம்...' என, காட்டமாகக் கேட்டுள்ளார்.


