PUBLISHED ON : மே 11, 2026 01:55 AM

'பதவி இல்லாவிட்டால் யாருமே மதிக்க மாட்டார்கள் போலிருக்கிறது...' என, கண்ணீர் வடிக்கிறார், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான விஜய்குமார் சின்ஹா.
பீஹாரில், பா.ஜ., வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. ஆளும் கூட்டணி அரசில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
இதற்கு முன், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். அவரது அரசில், பா.ஜ.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகித்தனர்.
இந்நிலையில், முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததால் அதிகார மாற்றம் ஏற்பட்டது. சாம்ராட் சவுத்ரி அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளத்தின் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் ஆகியோர் புதிய துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இதனால், ஏற்கனவே துணை முதல்வராக இருந்த சின்ஹா, தற்போது அமைச்சராக மட்டுமே பதவி வகிக்கிறார். சமீபத்தில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணியின் ஆலோசனை கூட்டம், பீஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது.
இதில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி, துணை முதல்வர்கள் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். சின்ஹா, இரண்டாவது வரிசையில் அமர வைக்கப்பட்டார். அவரது முகம் சுருங்கி விட்டது.
'முதல் வரிசையில் உட்கார்றதே கேள்விக் குறியாகி விட்டது. போகப்போக என்னவெல்லாம் நடக்குமோ...?' என புலம்புகிறார், சின்ஹா.
