PUBLISHED ON : மே 06, 2026 01:17 AM

'இப்படி எங்களை பரிதவிக்க விட்டு விட்டாரே...' என, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் குறித்து வருத்தப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி தோல்வி அடைந்து, தத்தளிக்கிறது.
கடந்த, 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால், சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியில் உள்ளனர். 'பா.ஜ.,வுடன் சில விஷயங்களில் இணைந்து செயல்பட்டால், நமக்கு எதாவது பலன் கிடைக்கும்' என கூறி வந்தனர்.
இந்நிலையில் தான், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, சமீபத்தில் லோக்சபாவில் ஓட்டெடுப்புக்கு வந்தது. பா.ஜ.,வுக்கு போதிய பலம் இல்லாததால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, அகிலேஷ் யாதவ் பற்றி கூறும்போது, 'என் நண்பர்' என, குறிப்பிட்டார். சமாஜ்வாதி கட்சிக்கு லோக்சபாவில், 37 எம்.பி.,க்கள் இருப்பதால், அவர்களது ஆதரவை பெறுவதற்காக, பிரதமர் இவ்வாறு பேசியதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதனால், எல்லாரது பார்வையும் அகிலேஷ் யாதவ் மீதே இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், மசோதாவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் ஓட்டளித்தனர். இதையடுத்து, 'நல்ல வாய்ப்பை எங்கள் தலைவர் கெடுத்து விட்டாரே...' என, சோகத்துடன் கூறுகின்றனர், சமாஜ்வாதி கட்சியினர்.





