PUBLISHED ON : மே 08, 2026 12:29 AM

'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் யாரை நம்புகிறேனோ, அவர்கள் எல்லாம் எனக்கு துரோகம் செய்கின்றனர்...' என கண்ணீர் வடிக்கிறார், டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு ராஜ்யசபா எம்.பி.,க்கள், சமீபத்தில் அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தனர். ஆம் ஆத்மி எம்.பி.,க்களை பா.ஜ.,வுக்கு இழுத்து வந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்தவர், முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலின் வலதுகரமாக செயல்பட்ட ராகவ் சத்தா.
டில்லி, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டபோது, தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்தார், அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது, அவருக்கு உதவியவர் தான், ராகவ் சத்தா.
இதன் காரணமாக, ராகவ் சத்தாவை முழுமையாக நம்பிய கெஜ்ரிவால், அவரிடம் கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்ததுடன், அவரை ராஜ்யசபா எம்.பி., பதவியிலும் அமர்த்தி அழகு பார்த்தார்.
இந்த ராகவ் சத்தா தான், தற்போது ஆறு எம்.பி.,க்களை தன்னுடன் இழுத்துக் கொண்டு, பா.ஜ.,வில் ஐக்கியமாகி உள்ளார்; இதை கெஜ்ரிவாலால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகளோ, 'கெஜ்ரிவாலுக்கு இன்னும் முழுமையாக அரசியல் தெரியவில்லை. அவர் படிக்க வேண்டிய அரசியல் பாடம், இன்னும் அதிகம் உள்ளது...' என்கின்றனர்.
