PUBLISHED ON : ஜூன் 18, 2025 12:00 AM

'பாவம்; அவரும் எத்தனை நாளைக்கு தான் காத்திருப்பார்...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
நடிகையான ஸ்மிருதி இரானி, அரசியலுக்கு வருவதற்கு முன், ஹிந்தி, 'டிவி' தொடர்களில் நடித்து வந்தார். 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசில், மத்திய மனிதவளத் துறை அமைச்சராகபதவியேற்றார். 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.,யின் அமேதி தொகுதியில், காங்கிரசின் ராகுலை தோற்கடித்தார், ஸ்மிருதி.
இதனால், பா.ஜ.,வில் அவரது செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியது. அப்போது, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் மத்திய அமைச்சரானார்.
இந்நிலையில், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் அமேதியில் போட்டியிட்டவர், காங்கிரசின் கிஷோரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால், அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை.
வேறு ஏதாவது முக்கிய பொறுப்பு கிடைக்கும் என, ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தார். அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து, ஹிந்தி, 'டிவி' தொடர்கள் தயாரிக்கும் பிரபலம் ஒருவரை, சமீபத்தில் சந்தித்துப் பேசியதாகவும், 'டிவி' தொடரில் மீண்டும் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
ஸ்மிருதி ஆதரவாளர்களோ, 'காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர்...' என, புலம்புகின்றனர்.