PUBLISHED ON : மே 14, 2025 12:00 AM

'இவரை போன்றவர்களை வைத்து எப்படி கட்சி நடத்துவது?' என, கர்நாடக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், காங்கிரசை சேர்ந்தவருமான ஜமீர் அகமது கான் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்த கட்சி பிரமுகர்கள்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், ஜமீர் தெரிவித்த கருத்துகள், பரபரப்பையும், நகைப்பையும் ஏற்படுத்தின.
'மனித வெடிகுண்டாக மாறி, பாகிஸ்தானுக்கு சென்று தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறேன்; என்னுடன் வர விரும்புவோர் வரலாம்...' என்றார், ஜமீர்.
தன் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவும், பாராட்டும் கிடைக்கும் என நினைத்த ஜமீருக்கு ஏமாற்றமே கிடைத்தது. 'போர் போன்ற பதற்றமான, உணர்வுபூர்வமான விஷயங்களில் காமெடி செய்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நகைச்சுவை நடிகரானால், இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது...' என, காங்கிரஸ் கட்சியினரே ஜமீரை கிண்டல் அடித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், 'நான் சீரியசாக பேசும் விஷயங்களை பார்த்து சிரிக்கின்றனர். உண்மையாகவே பாகிஸ்தானுக்கு போக தயாராக இருக்கிறேன்...' என்றார்.
கர்நாடகா மக்களோ, 'ஜமீர் இருக்கும் வரை நமக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. தொடரட்டும் அவரது சேவை...' என, ஜாலியாக கூறுகின்றனர்.