PUBLISHED ON : ஜூன் 19, 2024 12:00 AM

'ஆட்சியை பிடித்தும் எந்த பலனும் இல்லையே...' என கண்களை கசக்குகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு.
இங்கு, சமீபத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடந்தது. இரண்டு தேர்தல்களிலுமே அபார வெற்றி பெற்றது தெலுங்கு தேசம். ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்த சந்திரபாபு, வெற்றிகரமாக மீண்டும் முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்து விட்டார்.
ஆனால், இந்த பதவியை அடைவதற்காக அவர் பட்ட சிரமம் கொஞ்சம், நஞ்சம் இல்லை. சட்டசபையில், சந்திரபாபு மற்றும் அவரது குடும்பத்தை ஆபாசமாக பேசினார், அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதனால், 'இனி, முதல்வராகத் தான் சட்டசபைக்குள் நுழைவேன்...' என சபதம் செய்து வெளியேறினார், சந்திரபாபு. அதன்பின், அவரை ஊழல் வழக்கில் கைது செய்து, ஒரு மாதத்துக்கு மேலாக சிறையில் அடைத்தார் ஜெகன்.
அரசியல் வேறுபாடுகளை கடந்து பலரும், 'ஒரு மூத்த அரசியல்வாதியை இவ்வளவு மோசமாக நடத்துவது சரியல்ல...' என, ஜெகன் மோகனை கண்டித்தனர். ஆனால், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
இத்தனை சோதனைகளையும் கடந்து தான், தற்போது ஆட்சியை பிடித்துள்ளார், சந்திரபாபு. ஆனால், முந்தைய அரசு, கஜானாவை மொத்தமாக காலி செய்து விட்டது.
இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட நிதி இல்லாமல் திண்டாடுகிறார், சந்திரபாபு. 'கஜானாவும் காலி, சந்திரபாபு நாயுடுவும் காலி...' என கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.