PUBLISHED ON : மார் 14, 2025 12:00 AM

'அடியோடு மாறி விட்டாரே...' என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மத்திய விவசாய துறை அமைச்சருமான, பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் நடவடிக்கைகளை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
மத்திய பிரதேசத்தில் சவுகான் முதல்வராக பதவி வகித்தபோது, பெண்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி, அவர்களது அமோக ஆதரவை பெற்றிருந்தார். பெண்கள் அவரை அன்புடன், 'மாமாஜி' என, அழைத்தனர்.
இதுகுறித்து, சமூக வலைதளங்களிலும், பொது வெளிகளிலும் தன்னை அதிகமாக விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். ம.பி.,யில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தும், சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை.
புதுமுகமான மோகன் யாதவ், முதல்வரானார். இதனால், விரக்தியில் இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான், தீவிர அரசியலில் இருந்து விலகி விடுவது குறித்து யோசித்து வந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், பிரதமர் மோடி அரசில், சவுகானுக்கு மத்திய விவசாய அமைச்சர் பதவி கிடைத்தது. இதன்பின், அவரது நடவடிக்கைகள் மாறிவிட்டன.
விளம்பர வெளிச்சத்தில் இருந்து அடியோடு விலகி விட்டார். சமீபத்தில், அவரது மகன்கள் இருவருக்கு அடுத்தடுத்து, எளிமையான முறையில் திருமணங்கள் நடந்து முடிந்தன.
'விளம்பரங்களாலும், ஆடம்பரத்தாலும் ஏற்கனவே அனுபவித்த துயரமே போதும் என சவுகான் நினைத்து விட்டார் போலிருக்கிறது...' என்கின்றனர், ம.பி., அரசியல்வாதிகள்.