
ஆக்ஞா மற்றும் வைராக்யா
சத்குரு: ஆக்ஞா, ஞானத்திற்கு மூலமாக இருக்கிறது; மிக உயரிய பகுத்துணர்வு நிலை என்பது இதுதான். இதற்கு உவமை குறிப்பிட வேண்டுமானால், ஏழு அடிப்படை நிறங்களை தன்னில் உள்ளடக்கியுள்ள வெண்ணிற ஒளியை எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஒளியானது ஒரேயொரு நிறம் மட்டும் கொண்டதாக இருந்தால் - ஊதா நிறத்தில் ஒளிர்வதாக எடுத்துக்கொள்வோம், அது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படும். அதுவே நிறமற்ற ஒளி, எல்லாவற்றுக்குமே பயன்படும். பொதுவாக நாம் அதை வெண்ணிற ஒளி என்று அழைக்கிறோம், ஆனால் உண்மையில் அது நிறமற்றது - அதை நீங்கள் பார்ப்பதில்லை.
நிர்வாண உண்மை
மக்கள், எப்போதுமே ஏதோ ஒரு அவசர வேலையாக அங்குமிங்கும் சென்றுகொண்டே இருப்பதை பார்க்கவே எனக்கு ஏதோ மர்மமாகவே தெரிந்தது. எப்படி ஒவ்வொருவரும் எங்கேயோ சென்றுகொண்டே இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பின்னாளில் நாம் ஒரு கவிதை எழுதினோம் - அவர்கள் எங்கு செல்கின்றனர் என்பது உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியுமா?; எனக்கு எதைப் பற்றியும் எதுவுமே தெரியவில்லை; நான் எங்கே சென்று கொண்டிருந்தேன் என்பதைப் பற்றியும் எனக்கு எந்த துப்பும் துலங்கவில்லை. வீட்டில், “பள்ளிக்கூடம் செல்' என்றார்கள். நான் ஏன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் சற்று தாமதமாக வீட்டுக்கு வந்தால், “நீ ஏன் விரைவாக வீடு திரும்பவில்லை?” என்று கேட்டனர். நான் ஏன் விரைவாக வீடு திரும்பவேண்டும் என்பதும் எனக்குத் தெரியவில்லை. நான் ஏன் அதையெல்லாம் செய்யவேண்டும்?
உள்நிலையில் விடுதலை
உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளிவிஷயங்கள் முடிவு செய்ய முடியாதபோது உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் அளவிடமுடியாதது. உங்களுக்குள் முக்கியத்துவம் பெறும் விஷயங்களில் நீங்கள் முதலீடு செய்யவேண்டிய சக்தியின் அளவு பிரம்மாண்டமானது. வெளிவிஷயங்கள் உங்களுக்கு முக்கியமானதாக இருப்பதில்லை, ஏனென்றால் அதை உள்ளபடியே நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணை எல்லா உறுப்புகளுடனும், குடல்கள், கல்லீரல், மற்றும் பலவாறாகவும் நீங்கள் பார்ப்பதாக கற்பனை செய்து பாருங்கள். மருத்துவம் பயின்ற பலரும், உடற்கூறியல் மற்றும் கூறாய்வு செய்த பிறகு, திருமணம் செய்ய தங்களுக்கு விருப்பமின்றி போனதைப்பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்; எந்த உடலுடனும் அவர்களுக்கு எதுவும் செய்ய தேவையற்றுப்போனது, ஏனென்றால் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அவர்கள் பார்த்துவிட்டனர். குறைந்தபட்சம், ஆரம்பத்தில் அவர்கள் அப்படித்தான் உணர்ந்தனர்; ஒருவேளை, பிற்பாடு உடலின் தேவைகளுக்கு அவர்கள் வீழ்ந்திருக்கக்கூடும்.
தெளிவுக்கு ஏன் இனிமை தேவைப்படுகிறது?
ஒருவித பரவச உணர்வு இல்லாமல், கூர்மையான காரண அறிவு வந்துவிட்டால் உங்களால் உங்களை வாழ்வில் ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. நீங்கள் ஒவ்வொன்றையும் ஊடுருவிப் பார்க்கிறீர்கள். கௌதமர் கூறியதைப் போல, “வாழ்க்கை துன்பமயமானது. முதுமை, நோய் அல்லது மரணம் - இதுதான் முடிவில் உங்களுக்காக காத்திருக்கிறது.” நாமும் மக்களிடம், “உங்களுக்கு நிகழவிருக்கும் ஒரே விஷயம், நீங்கள் கல்லறையில் சென்று முடிந்துவிடுவீர்கள்” என்றே தொடர்ந்து கூறி வருகிறோம். கல்லறையின் கடுமை மக்களை உறுத்தாதவாறு அதை நாம் கூறுகிறோம். நான் கல்லறையைப் பற்றிப் பேசும்போது, மக்கள் சிரிக்கின்றனர்; அவர்கள் குதூகலமாகிவிடுகின்றனர் - அது ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்வது என்னவாக இருந்தாலும், முடிவில், அவர்கள் உங்களை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள் என்பதை நீங்கள் நிதர்சனமாகக் கண்டால், அது பயங்கரமாகவும், அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கக்கூடும்.
ஆக்ஞாவும் ஈஷாவும்
ஈஷா யோக மையத்தில்கூட, மக்களுக்கு நாம் முதலாவதாக ஆக்ஞாவையே காட்டுகிறோம். ஏனென்றால், உலகில் அதுதான் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆக்ஞாவின் மீது சாதனா செய்யும் மக்கள் எப்போதும் மதிக்கப்படுவார்கள். நாம் விஷுத்தியை முன்னிறுத்தினால், அமானுஷ்யமானவர்களாக நாம் முத்திரையிடப்படுவோம். அனாகதாவை நாம் முன்னிலைப்படுத்தினால், நாம் ஏதோ குழப்பத்தில் இருப்பவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் ஆக்ஞாவை நாம் முன்னிறுத்தும்போது, மக்கள் அதை சிறந்ததாகவும், உண்மையிலேயே அதுதான் ஆன்மீகம் என்றும் கருதுகின்றனர். முகம் எப்போதுமே ஆக்ஞாதான், ஏனென்றால் ஆக்ஞா என்பது தெளிவு. இந்த உலகத்தில் எனது தெளிவுக்காகவே நான் மதிக்கப்படுகிறேன். நான் யார் என்பதன் மற்ற பல அம்சங்களைப் பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாது. தெளிவு முக்கியமில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் அதுதான் எல்லாமே என்பதும் இல்லை. முழுமையான தெளிவு என்பது, ஆர்வமின்மை, தனித்திருத்தல் மற்றும் வாழ்விலிருந்து விலகுதல் போன்றவற்றை உருவாக்கும்.