Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கார்த்திகை நாயனார் தலம்

கார்த்திகை நாயனார் தலம்

கார்த்திகை நாயனார் தலம்

கார்த்திகை நாயனார் தலம்

ADDED : நவ 26, 2012 11:32 AM


Google News
Latest Tamil News
திருக்கார்த்திகையன்று அவதரித்து, தலைமுடியையே திரியாக்கி சிவனுக்கு விளக்கிட்ட கணம்புல்லநாயனார், சேலம் மாவட்டம் பேலூரில் அவதாரம் செய்தார். திருக்கார்த்திகையன்று இங்குள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது சிறப்பு .

தல வரலாறு:





தீர்த்தயாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன், மகாவிஷ்ணுவிடம் பெற்ற, வருணாஸ்திரத்தை இங்கிருந்த மலை மீது எய்தான். அம்பு பட்ட இடத்திலிருந்து வெளியேறிய தீர்த்தம் ஆறாக ஓடியது. அதில் நீராடி, சிவபெருமானை மானசீகமாக பூஜை செய்தான். அப்போது, பூமியில் இருந்து ஒரு லிங்கம் வெளிப்பட்டது. பூமியிலிருந்து தானாகத் தோன்றியது என்பதால் சிவனுக்கு, 'தான்தோன்றீஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது.

பிருத்வி தலம்:





இங்குள்ள சிவலிங்கம் 'விடங்க லிங்கம்' (உளியால் செதுக்காதது) ஆகும். அர்ச்சகர்கள் சுவாமியைத் (தீண்டாத்திருமேனி) தொட்டு பூஜிப்பதில்லை. அர்ஜுனன் உருவாக்கிய தீர்த்தம் வெள்ளாறு என்ற பெயரில் ஓடுகிறது. இந்நதிக்கரையில், ஏத்தாப்பூர் (நீர்), ஆத்தூர் காயநிர்மாலேஸ்வரர் (அக்னி), ஆறகழூர் காமநாதீஸ்வரர் (வாயு), கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் (ஆகாயம்) ஆகியவை பஞ்சபூதத் தலங்களாக உள்ளன. சித்திரையில் தான்தோன்றீஸ்வரர் மீது, சூரியக்கதிர் விழுகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். அம்பிகைக்கு அறம்வளர்த்தநாயகி, தீர்க்க சுமங்கலி வரம் தருபவளாக விளங்குகிறாள்.

திருநீறு மலை:





காட்டிலுப்பை மரம் இத்தலத்தின் விருட்சம். இங்கு தினமும் ஒரு கனி காய்க்கும் பலாமரம் விருட்சமாக இருந்தது. சிவனை பூஜிக்க வந்த வசிஷ்டர், தினமும் அந்த கனியைச் சிவனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம். ஒருமுறை துந்துபி என்ற அசுரன், பலாப்பழத்தை உண்டு விட்டான். இதைக்கண்ட வசிஷ்டர், அவனை மலையாக மாறும்படி சபித்துவிட்டார். மேலும், சிவனுக்கு கனி தராமல் அசுரனுக்கு உணவானதால், பலா மரத்தை அதன் புனிதம் இழக்கும்படி செய்துவிட்டார். அது இலுப்பை மரமாக மாறிவிட்டது என்கிறது தலபுராணம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில் வெண்ணிற மண்குன்று உள்ளது. வசிஷ்டரின் யாகத்தில் தோன்றிய சாம்பலே, இவ்வாறு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மண்ணைச் சுத்திகரித்து விபூதி பிரசாதமாகத் தருகிறார்கள்.

வாஸ்து பிரச்னை:





வீடு கட்டும் முன்போ, கட்டியபிறகோ வாஸ்து பிரச்னை இருந்தாலோ, வீடு, கட்டடப்பணிகளில் தாமதம் ஏற்பட்டாலோ பூமித்தலமான இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பூஜை செய்கிறார்கள். புதுவீடு கட்டும் முன்பாக இங்கு சென்று வணங்கி வந்தால், பணிகள் தடையின்றி நடக்கும் என்கின்றனர்.

நாயனார் அவதாரம்:





நாயன்மார்களில் ஒருவரான கணம்புல்லநாதர் பிறந்த தலம் இது. இவர் திருக்கார்த்திகையன்று அவதரித்தவர். செல்வந்தரான இவர் சிவனுக்கு, தினமும் நெய் தீபம் ஏற்றி வந்தார். இப்படி திருப்பணி செய்தே தன் செல்வத்தை இழந்த இவர், ஒரு கட்டத்தில் திரி வாங்கக்கூட பணமில்லாமல், கணம்புல்லை திரியாக்கி தீபமேற்றினார். அதுவும் அணைந்துவிடவே, தலைமுடியை திரியாக்கி தீபமேற்றினார். அவரது பக்தயில் மகிழ்ந்த சிவன், முக்தி கொடுத்தருளினார். கணம்புல்லநாதருக்கு இங்கு சந்நிதி உள்ளது. திருக்கார்த்திகையன்று இவரை வழிபடுவது சிறப்பாகும்.

கல்யாண விநாயகர்:





இங்குள்ள கல்யாண விநாயகர் சந்நிதியில் இரண்டு விநாயகர்கள் உள்ளனர். ஒருவர் வலம்புரியாகவும், மற்றொருவர் இடம்புரி நிலையிலும் அருளுகின்றனர். திருமண தோஷம் உள்ளவர்கள் தடை நீங்கி நல்ல வரன் அமைய, வலம்புரி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர். திருமணமானதும் வாழ்க்கைத்துணையுடன் வந்து இடம்புரி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்கிச் செல்கின்றனர். பிரகாரத்தில் வன்னிமர விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், தூணில் நர்த்தன விநாயகர் உள்ளனர். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனிபகவான் ஒற்றைக்காலில் நின்று, மற்றொரு காலை காகத்தின் மீது வைத்துள்ளார்.

இருப்பிடம்:





சேலத்திலிருந்து வாழப்பாடி சென்று, அங்கிருந்து 6 கி.மீ., தூரத்தில் பேலூர்.

திறக்கும் நேரம்:





காலை 7- 12.30, மாலை 4- இரவு 8 .

போன்:





04292 241 400.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us